அரசாங்க முதலீடுகளில் எதிர்பார்க்கப்படும் நீண்டகால லாப ஈவு தொடர்பாக அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் நிதி அமைச்சின் அதிகாரிகளும் விளக்கமளித்துள்ளனர். முன்னுரைக்கப்பட்ட லாப ஈவை வைத்து அடுத்த வரவுசெவவுத் திட்டத்துக்கு நாட்டின் நிதி இருப்பிலிருந்து எவ்வளவு பெறலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிபர் ஆலோசகர் மன்றமும் கலந்துகொண்டதாக அதிபர் ஹலிமா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டார்.
நிதிச் சந்தையின் நீண்டகாலப் போக்கு குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஜிஐசி, சிங்கப்பூர் நாணய ஆணையம், தெமாசெக் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
“வருடாந்திர வரவுசெலவுத் திட்ட செயல்முறையில் இந்த லாப ஈவு முன்னுரைப்புக் கூட்டம் ஓர் முக்கிய அம்சம். “முன்னுரைப்பை நாங்கள் மிக கவனமாக ஆராய்வோம். நிகர முதலீட்டு வருவாய் கட்டமைப்பின்கீழ் முன்னுரைக்கப்பட்ட லாபத்தைக் கொண்டு நாட்டின் நிதி இருப்பிலிருந்து எவ்வளவு செலவிடலாம் என்பது தீர்மானிக்கப்படும்,” என்றார் அதிபர் ஹலிமா.
நிகர முதலீடு லாப ஈவுக் கட்டமைப்பின்கீழ், ஜிஐசி, சிங்கப்பூர் நாணய ஆணையம், தெமாசெக் ஆகியவற்றின் முதலீடுகளுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நீண்டகால லாப ஈவில் 50 விழுக்காட்டுத் தொகையை வரவுசெலவுக்கு அரசாங்கம் ஒதுக்கலாம்.
அரசாங்க முறிகளுக்காகச் செலுத்த வேண்டிய தொகையைக் கழித்தபின் இந்தத் தொகை நிர்ணயிக்கப்படும். நாட்டின் நிதி இருப்பு நீடிப்பதை இந்தச் செயல்முறை உறுதி செய்கிறது. அதுமட்டுமல்லாது, வரவுசெலவுத் திட்டத்துக்காக எதிர்கால அரசாங்கங்களுக்கு தடையற்ற லாப ஈவுகளை இது உறுதி செய்யும் என்று நிதி அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்தது. அரசாங்கத்தின் சொத்துகளைப் பெரும்பாலும் ஜிஐசி தான் நிர்வகிக்கிறது. ஓரளவுக்கு எச்சரிக்கையாகச் செயல்படும் நிபுணத்துவ நிதி நிர்வாக அமைப் பாக ஜிஐசியை நிதி அமைச்சு வர்ணித்தது.