சிங்கப்பூர் பொது மருத்துவமனை வளாகத்தின் சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு ஓட்டுநர்கள் எளிதாக செல்ல முடியும். மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு பகுதியை இணைக்கும் வகையில் புதிய சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, தற்போதைய என்சிசிஎஸ் கட்டடம் அல்லது 2, 3, 4வது புளோக்குக்குச் செல்ல விரும்பும் ஓட்டுநர்கள், கம்போங் பாரு ரோடு அல்லது ஜாலான் புக்கிட் மேராவைப் பயன்படுத்தி காலேஜ் ரோடு வழியாக மருத்துவமனைக்குள் நுழையலாம். அகடெமியா, சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையம், நீரிழிவு சிகிச்சை நிலையம், புளோக் 5, 6 அல்லது 7 ஆகியவற்றுக்குச் செல்ல விரும்பும் ஓட்டுநர்கள், ஊட்ரம் சாலையைப் பயன்படுத்தி காலேஜ் ரோடு வழியாக மருத்துவமனைக்குள் நுழையலாம்.
புதிய ஊட்ரம் சமூக மருத்துவமனை கடந்த சனிக்கிழமை அன்று திறக்கப்பட்டது. மேலும் சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் சிகிச்சை நிலையம், அவசர சிகிச்சை கட்டடம், சிங்கப்பூர் தேசிய பற்சிகிச்சை நிலையம் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகள் சுற்றிலும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சாலைகளை இணைக்கும் வகையில் புதிய சாலை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 2ஆம் தேதியிலிருந்து இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பாதை, நீரிழிவு நோய் சிகிச்சை நிலையம், சிங்கப்பூர் கண் சிகிச்சை நிலையம், அவசர சிகிச்சை மருத்துவக் கட்டடம், ‘எஸ்ஜிஎச்’ புளோக் 3, என்சிசிஎஸ் மற்றும் ஊட்ரம் பார்க் எம்ஆர்டி வழியாகச் செல்லும். மற்றொரு பாதை, ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையம், சிங்கப்பூர் தேசிய இதய நல சிகிச்சை நிலையம், ஊட்ரம் சமூக மருத்துவமனை ஆகியவற்றின் வழியாகச் செல்லும்.
கடந்த முறை பழைய பாதையில் ஒரு வழிப் பயணத்துக்கு 40 நிமிடம் தேவைப்பட்டது. ஆனால் தற்போதைய புதிய பாதைகளில் முறையே 35, 20 நிமிடங்கள் போதும்.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு பயண நேரம் மிச்சமாகும்.