தீயை அணைப்பதற்காக அதிகாரிகள் புளோக்கின் நீர்க்குழாய்களைப் பயன்படுத்த முடியாமல் போன சம்பவத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாது, நேற்று உயிரிழந்தார்.
நவம்பர் 1 அன்று புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21, புளோக் 210A, 13வது மாடியில் ஒரு வீட்டில் அதிகாலை 4 மணியளவில் நெருப்பு மூண்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், தீயை அணைப்பதற்காக புளோக்கில் இருந்த நீர்க்குழாய்களைப் பயன்படுத்த முயற்சி செய்தனர்.
ஆனால் நீர்க்குழாய் இருந்த அலமாரி பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்த பின்னர், நீர்க்குழாய்களில் தண்ணீரும் வரவில்லை.
இதனால் அதிகாரிகள் ஓட்டி வந்த அவசர வண்டிகளில் இருந்த நீரைக் கொண்டு தீயை அணைக்க வேண்டியிருந்தது.
சம்பவத்தில் காயமடைந்த 60 வயது மதிக்கத்தக்க திருவாட்டி கோ, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஒரு மாதமாகச் சிகிச்சை பெற்று வந்தார்.
மாதுடன் அவரின் கணவருக்கும் அவர்களின் 30 வயது மதிக்கத்தக்க மகனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புக்காகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
தீச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் மாதின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மகன் நவம்பர் 15ஆம் தேதியன்று வீடு திரும்பினார்.
இதைத் தொடர்ந்து திருவாட்டி கோ உயிரிழந்ததைக் குறித்து நேற்று புக்கிட் பாத்தோக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity