பகுதிநேர வேலையாக பீஸா விநியோகித்து வந்த ஸ்காய் லீ ஷி ஜியாவுக்கு, தன் மின்-ஸ்கூட்டரால் ஒரு மாதை மோதியதற்கு நேற்று ஆறு மாத நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டது.
அத்துடன் 100 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஸ்காய்க்கு உத்தரவிட்டது.
தெக் வாய் லேனில் புளோக் 137 அருகே ஒரு நடைபாதையில் விதிமுறைகளுக்கு உட்படாத தனிநபர் நடமாட்டச் சாதனத்தை சென்ற ஆண்டு மே 23ஆம் தேதியன்று, ஸ்காய் ஓட்டிச் சென்றதாகவும் சாலைச் சந்திப்பை நெருங்கும்போது சாதனத்தின் வேகத்தைக் குறைக்கத் தவறியதாகவும் கூறப்பட்டது.
நடைபாதையில் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய சாதனம், அப்போது 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது.
இதனால் அங்கு வந்த 55 வயதான திருவாட்டி டோ மெங் வானைக் கண்டதும் ஸ்காயால், தன் மின்ஸ்கூட்டரை உடனே நிறுத்த முடியவில்லை.
திருவாட்டி டோ மீது மோதியதில் அவருக்கு வலது கை, கணுக்கால், தலையில் காயங்கள் ஏற்பட்டன. அவரின் தலையில் ஏற்பட்ட வெட்டுக்காயத்திற்கு மூன்று தையல்கள் தேவைப்பட்டன.
சம்பவம் நடந்ததை அடுத்து திருவாட்டி டோவுக்குத் துணையாக ஸ்காய் பக்கத்தில் இருந்து உதவியதாகக் கூறப்பட்டது.
பிறரின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் கவனக்குறைவான செயலில் ஈடுபட்டதன் தொடர் பிலான குற்றச்சாட்டை ஸ்காய் நேற்று ஒப்புக்கொண்டதாக அறியப்படுகிறது.
அத்துடன் தண்டனை விதிப்பின்போது, நடைபாதையில் சட்டவிரோத தனிநபர் நடமாட்டச் சாதனத்தை ஓட்டிய குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
ஸ்காய்க்கு அதிகபட்சமாக ஆறு மாதச் சிறைத் தண்டனையும் $2,500 வரையிலான அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.