வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்த தாரர் என்று தன்னைக் கூறிக்கொண்டு தனது நிறுவனத்தின் சேவைகளைப் பெறச் செய்ததன் தொடர்பில் நேற்று 56 வயதான கேரி லாவுக்கு (படம்) ஆறு மாதச் சிறைத் தண்டனையும் $2,400 அபராதமும் விதிக்கப்பட்டன.
ஏழு மூத்த குடிமக்கள் உட்பட 15 பேரை லாவ் ஏமாற்றக் குறி வைத்ததாக கூறப்பட்டது.
இவர்களில் பத்து பேரிடமிருந்து கிட்டத்தட்ட $1,860 தொகையை லாவ் ஏமாற்றிப் பெற்றதாகக் கூறப்பட்டது.
சோதனை என்ற பெயரில் குடியிருப்பாளர்களின் வீட்டுச் சுவர்களிலும் உட்கூரையிலும் ஒட்டுப் போடும் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறி முன் பணத்தையோ மொத்த கட்டணத்தையோ ரொக்கமாக லாவ் பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது.
வீவகவின் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் பட்டியலில் லாவ் இடம்பெறவில்லை என்பதைச் சிலர் உணர்ந்து தங்களின் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி செய்தனர்.
ஆனால் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறமுடியாது என்று ரசீதில் எழுதப்பட்டதை லாவ் சுட்டிக்காட்டியதாக அறியப்படுகிறது.
இதற்கிடையே முன்னாள் சீனக் குடியுரிமை பெற்ற லாவ், நேற்று மோசடி தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகளையும் தாக்குதல், அச்சுறுத்தல் தொடர்பான இரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.