நடைபாதையில் மின்-ஸ்கூட்டரை ஓட்ட அரசு தடை விதித்துள்ளதை அடுத்து அச்சாதனத்தைப் பயன்படுத்தி உணவு விநியோகம் செய்வோருக்கு உதவப் புதிய பயிற்சித் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. மின்-ஸ்கூட்டரிலிருந்து மின்-பைக்குக்கு மாறவுள்ள உணவு விநியோக ஓட்டுநர்கள், இத்திட்டம் மூலம் பலனடைவர் என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) நேற்று அறிவித்தது.
மின்-ஸ்கூட்டர் குறித்து அரசு விதித்த தடையால் கிட்டத்தட்ட 7,000 உணவு விநியோகிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் ‘என்டியுசி’, இப்புதிய பயிற்சித் திட்டத்தில் இறங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 2,000 பேர் பயிற்சி பெறுவதற்குத் தேவையான நிதி தற்போது உறுதியாகிவிட்டது.
இதற்கு முன் ‘கிராப்’, ‘டிலிவரூ’, ‘ஃபூட்பேன்டா’ ஆகிய உணவு விநியோக நிறுவனங்களுடன் நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து $7 மில்லியன் மதிப்பிலான ஒரு திட்டத்திற்கு நிதியளித்திருந்தன. இதன்படி 2,500க்கும் மேற்பட்ட உணவு விநியோகிப்பாளர்கள் தங்களின் மின்-ஸ்கூட்டர்களைத் திரும்பக் கொடுத்து மின்-பைக்குகளைப் கழிவு விலையில் பெற்றுக்கொண்டனர்.
இந்தத் திட்டத்திற்குத் துணையாக இப்புதிய பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சித் திட்டத்தில் ஐந்து கூறுகள் உள்ளன. ஒவ்வொரு கூறுக்கும் ஒரு நாள் வகுப்பு நடத்தப்படும்.
இவ்வகுப்புகளுக்கான கட்டணத்தில், ‘என்டியுசி’, ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’, ‘வெர்க்ஃபோஸ் சிங்கப்பூர்’ ஆகிய அமைப்புகள் 90% கழிவைத் தரும்.
அத்துடன் ‘என்டியுசி’ சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சிக்கு முழு கட்டணமும் கட்டப்படும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் உணவு விநியாக ஓட்டுநர்கள், தங்களின் நிறுவனங்கள் மூலம் விருப்பம் தெரிவிக்கலாம். இத்தகைய முறையிலான பயிற்சித் திட்டங்கள், ஓட்டுநர்களுக்கு உதவுவதுடன் ஓட்டுநர்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள தவறான எண்ணத்தையும் மாற்றலாம் என்று என்டியுசியைச் சேர்ந்த திருவாட்டி ஜீன் சீ கூறினார்.