மக்களின் ஆயுட்காலம், கல்வித் தகுதி போன்ற குறியீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித மேம்பாட்டு அறிக்கையில் சிங்கப்பூர் மீண்டும் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால் கல்வி, வருமானம் ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வு தொடர்பில் சிங்கப்பூர் 14 இடங்கள் சரிந்தது.
இத்தகைய ஆய்வில் குறைவான விழுக்காடு என்றால் குறைவான ஏற்றத்தாழ்வு என்று பொருள்படும்.
அவ்வகையில் சிங்கப்பூரில் உள்ள கல்வி ஏற்றத்தாழ்வு 11 விழுக்காட்டில் இருந்தது.
இதே கல்வி ஏற்றத்தாழ்வு தொடர்பில், பட்டியலின் முதலிடத்தில் வந்திருந்த சுவிட்ஸர்லாந்தில், 1.9 விழுக்காடு எனப் பதிவாகியிருந்தது.
அத்துடன் ஏற்றத்தாழ்வு, அனைத்து வகை சமூகத்தினரையும் முடக்கிவிடக்கூடிய ஓர் உலகளாவிய பிரச்சினை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
“சமூக ஒற்றுமையை மட்டுமின்றி அரசாங்கம், அமைப்புகள் ஆகியவற்றின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த ஏற்றத்தாழ்வு பலவீனமாக்குகிறது,” என்று கூறப்பட்டது.
பல்கலைக்கழகத்திற்குச் செல்வது, இணையத்தைப் பயன்படுத்துவது போன்ற அம்சங்கள் இதற்குமுன் வசதிக்கென கருதப்பட்டன. இப்போது அவை ஒருவரின் வெற்றிக்குத் தேவையானவையாக உள்ளன என்று நிறுவனத்தைச் சேர்ந்த திரு பெட்ரோ கொன்சிகவ் தெரிவித்தார்.
மனித மேம்பாட்டு ஆய்வு அறிக்கையில் நார்வே முதலிடம் பெற்றிருந்தது.
அதையடுத்து சுவிட்ஸர்லாந்தும் அயர்லாந்தும் இடம்பெற்றிருந்தன.
நான்காவது இடத்தில் ஹாங்காங்கும் ஜெர்மனியும் இடம்பெற்றன.
இளம் சிங்கப்பூரர்களைக் காட்டிலும் முதியோருக்கு முறையான கல்வி கிட்டாததால் நாட்டில் கல்வி ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கலாம் என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் வால்டர் தெசேரா கூறினார்.
கல்வி ஏற்றத்தாழ்வு, வருமான ஏற்றத்தாழ்வு ஆகியவற்றைத் தவிர பொருளியல், கல்வித்தரம், வாழ்க்கைத்தரம் போன்ற அம்சங்களில் சிங்கப்பூர் சிறப்பாகச் செய்திருந்தது.