தனது அண்டைவீட்டாரின் சமய ரீதியிலான உணர்வுகளை இரண்டாவது முறையாகப் புண்படுத்திய பெண்ணுக்கு மற்றொரு கட்டாய சிகிச்சை ஆணை ஏற்புடையதில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலாய் முஸ்லிம் இனத்தவரான திருவாட்டி மார்லியா ஜோனெட் என்பவரின் வீட்டுக்கு வெளியே சமைக்காத பன்றி மாமிசத்தை வைத்ததற்காக லீ ஜி லின் எனும் 66 வயதுப் பெண்ணுக்கு 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் முறையாக கட்டாய சிகிச்சை ஆணை வழங்கப்பட்டது.
கட்டாய சிகிச்சை ஆணை வழங்கப்படுவோர் சிறைத் தண்டனைக்குப் பதிலாக மன நல சிகிச்சை பெறுவர்.
முதல் சம்பவம் நிகழ்ந்து ஈராண்டுகள் முடிவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, மாயத்தோற்றப் பிரச்சினையால் அவதிப்படும் லீ, தனது 63 வயதான அண்டைவீட்டாரை மீண்டும் குறிவைத்தார்.
லீக்கு மீண்டும் கட்டாய சிகிச்சை ஆணைக்கான ஏற்புத் தன்மையைச் சோதிக்குமாறு இன்று நீதிபதி பிரெண்டா டான் கோரினார்.
ஆனால், லீக்கு மீண்டும் கட்டாய சிகிச்சை ஆணை வழங்குவது ஏற்புடையதாக இருக்காது என முந்தைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.
லீக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணை வழங்குவதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆராய நீதிமன்றத்தை வலியுறுத்திய தற்காப்பு வழக்கறிஞர் சங் டிங் ஃபாய், தற்போது வீடு மாறுவதற்கான செயல்களில் லீ ஈடுபட்டிருப்பதகக் குறிப்பிட்டார். மேலும் லீ தற்போது மனநல சிகிச்சை பெறுவதாகவும், திருவாட்டி மார்லியாவிடம் மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
திருவாட்டி மார்லியாவின் உணர்வுகளைச் சமய ரீதியில் இருமுறை புண்படுத்தியதாக லீ கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.
தெம்பனிசில் உள்ள புளோக் ஒன்றின் எட்டாவது மாடியில் லீ வசித்து வருகிறார். அவரது வீட்டுக்குக் நேர் கீழாக திருவாட்டி மார்லியா வசிக்கிறார்.
மற்ற செயல்களுக்கிடையே, 2016ஆம் ஆண்டு திருவாட்டி மார்லியாவின் வீட்டு வெளிக் கதவில் சமைக்காத பன்றி மாமிசத்தை லீ எறிந்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி திருவாட்டி மார்லியா தனது மகளுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட சத்தம் லீயை எரிச்சலூட்டியது.
அதனையடுத்து, திருவாட்டி மார்லியாவின் காதுபட “பன்றிக் குட்டி” எனப் பொருள்படும் மலாய் வார்த்தைகளை லீ உதிர்த்ததாகக் கூறப்பட்டது. பின்னர் திருவாட்டி மார்லியா போலிசில் இதுபற்றி புகார் அளித்தார்.
மீண்டும் ஜூன் மாதம் 11ஆம் தேதி வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்த திருவாட்டி மார்லியாவை நோக்கி லீ தகாத முறையில் கத்தியதையடுத்து திருவாட்டி மார்லியா போலிசின் உதவியை நாடினார்.
அடுத்த மாதம் 23ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
மற்றவர்களை சமய ரீதியில் புண்படுத்துபவர்களுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity