இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை இம்மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை பெறுவார்கள் என்று கல்வி அமைச்சு இன்று (டிசம்பர் 12) தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அன்று பிற்பகல் 2 மணியிலிருந்து தங்கள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வை எழுதிய தனியார் மாணவர்கள் முடிவுகளை அஞ்சலில் பெறுவார்கள். தேர்வு பதிவின்போது குறிப்பிட்ட முகவரிக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
இதைத் தவிர, மாணவர்கள் தங்களது சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகத்தின் இணையத்தளத்திலும் 19ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்துக்கு (ஐடிஇ) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் படிவங்களை ஐடிஇயின் இணைய வாசல் மூலம் டிசம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை ஆங் மோ கியோ, சீமெய், சுவா சூ காங் ஆகிய இடங்களில் உள்ள ஐடிஇ கல்லூரிகளில் உள்ள வாடிக்கையாளர் சேவை கூடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
எந்த ஐடிஇ கல்லூரிக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி ஐடிஇ விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கல்லூரி தெரிவை ஏற்றுக்கொள்ளும் முடிவை மாணவர்கள் ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
வழக்கநிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றவுடன் மாணவர்கள் தங்கள் ஆசிரியரையோ அல்லது பள்ளிகளில் உள்ள கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழில் வழிகாட்டு அதிகாரிகளையோ நாடி தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை பெறலாம்.
அத்துடன் மாணவர்கள் MySkillsFuture இணையத்தளத்துக்குச் சென்று தங்களுக்குள்ள கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழில் பாதைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity