9 வயது மகளை மானபங்கப்படுத்திய தந்தைக்கு சிறை, பிரம்படிகள்

9 வயது மகளை மானபங்கப்படுத்திய தந்தைக்கு சிறை, பிரம்படிகள்

2 mins read
fe5c581b-0677-44c6-b35b-01b45f7c5bac
சிறுமியின் படுக்கையில் அவரைப் பின்னாலிருந்து கட்டிப் பிடித்த அவரது தந்தை சிறுமியிடம் தவறுதலாக நடந்துகொண்டார். படம்: ஷட்டர்ஸ்டாக் -

நண்பர்களுடன் சேர்ந்து மதுவருந்திவிட்டு வீடு திரும்பிய 44 வயது ஆடவர் படுக்கையறைக்குள் சென்று தம் மகளிடம் தவறாக நடந்துகொண்டார். அப்போது அந்தச் சிறுமிக்கு வயது 9.

தந்தையின் இந்தச் செயலால் விழித்துக்கொண்ட சிறுமி பயம் காரணமாக அமைதியாக இருந்தார்.

பெற்றோருக்கிடையே சண்டை மூளுமோ என்ற அச்சத்தில் தந்தையின் நடவடிக்கை குறித்து தாயாரிடம் சிறுமி தெரிவிக்கவில்லை.

அந்தத் தந்தைக்கு ஓராண்டு, ஒன்பது மாத சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் இன்று (டிசம்பர் 16) விதிக்கப்பட்டன.

14 வயதுக்குட்பட்ட ஒருவரை மானபங்கப்படுத்தும் நோக்கில் அவரிடம் பலவந்தமாக நடந்துகொண்டதை அந்தத் தந்தை முன்பு ஒப்புக்கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ஒரு நாள் மாலை, மதுவருந்திவிட்டு வீடு திரும்பிய அந்தத் தந்தை, அலமாரியிலிருந்து துணிகள் எடுப்பதற்காக சிறுமியின் அறைக்குள் நுழைந்தார். அங்கு சிறுமி தூங்கிக்கொண்டிருந்ததை அவர் கண்டார்.

சிறுமியின் படுக்கையில் அவரைப் பின்னாலிருந்து கட்டிப் பிடித்த அந்தத் தந்தை சிறுமியிடம் தவறுதலாக நடந்துகொண்டார்.

கடந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மேலும் இருமுறை அந்தச் சிறுமியிடம் அவரது தந்தை இதேபோன்று நடந்துகொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

ஒவ்வொரு சம்பவத்திலும் தந்தையின் செயலால் விழித்துக்கொண்ட சிறுமி, பயம் காரணமாக அமைதியாக இருந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதவாக்கில் தாயாரிடம் இதுகுறித்து சிறுமி தெரிவித்தார்.

அதனயடுத்து, 'அவேர்' எனப்படும் மாதர் செயலாய்வுச் சங்கத்தின் உதவியை நாடினார் சிறுமியின் தாயார். அச்சங்கம் இதுகுறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்குத் தகவல் அளித்தது. பின்னர் அமைச்சு போலிசில் இது குறித்து புகார் செய்தது.

பெற்ற தந்தையே சிறுமியை மானபங்கப்படுத்தியதுடன் மீண்டும் மீண்டும் அந்தச் செயலில் ஈடுபட்டதைச் சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு அந்தத் தந்தைக்கு ஓராண்டு, 11 மாத சிறைத் தண்டனையுடன் மூன்று பிரம்படிகள் விதிக்கும்படி கோரியது.

சிறுமியை அவரது தந்தை நன்கு வளர்த்ததைக் குறிப்பிட்டு, தன் கணவரின் தண்டனையைக் குறைக்கக் கோரி சிறுமியின் தாயார் மனு செய்திருப்பதைச் சுட்டிக் காட்டிய தற்காப்பு வழக்கறிஞர், அந்தத் தந்தை இதற்கு முன்பு ஏதும் தவறிழைக்கவில்லை எனவும் தனது நடத்தைக்காக அவர் வருந்துவதாகவும் குறிப்பிட்டார்.

14 வயதுக்குட்பட்ட சிறுமியை மானபங்கப்படுத்தும் நோக்கில் பலப்பிரயோகம் செய்த குற்றத்திற்கு அந்தத் தந்தைக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படிகள் போன்றவை விதிக்கப்பட்டிருக்கலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்