பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை முன்பைவிட அதிக சிங்கப்பூரர்கள் இப்போது உணர்கிறார்கள். எதிர்கால தலைமுறைகளுக்காக இந்த பூமியைக் காப்பாற்றுவதற்கு ஆகும் கூடுதல் செலவை ஏற்கவும் சங்கடங்களைத் தாங்கிக்கொள்ளவும் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் விரும்புகிறார்கள்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பருவநிலை மாற்றம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் தேசிய பருவநிலை மாற்றச் செயலகம் நேற்று அந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டது.
பருவநிலை மாற்றம் பற்றிய கருத்தாய்வை 2011 முதல் அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஆய்வு 15 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ள 1,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்டது.
பருவநிலை மாற்றம் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் 90 விழுக்காட்டினர் தெரிந்துகொண்டு இருக்கிறார்கள். சிங்கப்பூரில் கரிம வெளியேற்ற அளவைக் குறைத்துக்கொள்ளும் முயற்சியில் தங்கள் பங்கை ஆற்றுவதற்குத் தயார் என்று ஐந்து பேரில் ஏறக்குறைய நான்கு பேர் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர் என்ற முறையில் இதனால் தங்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளவும் கூடுதல் செலவை ஏற்கவும் தாங்கள் தயார் என்று அவர்கள் கூறினர். பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க தாங்கள் என்ன செய்ய முடியும் என்பது தெரியாமல் சிலர் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க என்ன செய்ய முடியும் என்பது தெரியும் என்று கூறியவர்கள் 100 பேருக்கு சுமார் 48 பேர். இருந்தாலும் சிங்கப்பூரர்கள் முடிந்த வரையில் பல மாற்றங்களையும் கைகொண்டு இந்த முயற்சியில் உதவி வருகிறார்கள்.
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது வீடுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்களைக் கடைப்பிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க எல்லா தரப்புகளின் முயற்சியும் அவசியம் என்று ஆய்வில் கலந்துகொண்டவர்கள் கூறினர். பருவநிலை மாற்ற பாதிப்புகளைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை என்றால் எதிர்கால தலைமுறைகள் பாதிப்புக்கு உள்ளாகிவிடும் என்று 84.8 விழுக்காட்டினர் உறுதிபட தெரிவித்து இருப்பது அந்த ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.