வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் தன்னுடைய தொண்டூழியக் கட்டமைப்பை விரிவுபடுத்துகிறது. அந்நிலையத்தில் இப்போது 5,000 தூதுவர்கள் இருக்கிறார்கள்.
அது மேலும் பல ஊழியர்களைத் தொண்டூழியர்களாகச் சேர்த்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லிட்டில் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் மனிதவள மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சரான ஸாக்கி முகம்மது இந்த நிலையத்தின் தொண்டூழியத் தூதுவர்கள் பலருக்கு அங்கீகாரச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அதைக் குறிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுகளுடன் ஞாயிற்றுக்கிழமை லிட்டில் இந்தியாவில் நிகழ்ச்சி நடந்தது.
“இந்தத் தொண்டூழியர்கள் தங்களுடைய சக ஊழியர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை இந்த நிலையத்திடம் தெரியப்படுத்துகிறார்கள். “இதன் மூலம் அந்த ஊழியர்களுக்கு உதவி கிடைக்கிறது,” என்று இந்த நிலையத்தின் தலைவரான இயோ குவாட் குவாங் தெரிவித்தார்.
2017ல் 1,500 தொண்டூழியர்கள் இருந்தனர். இப்போது இவர்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயர்ந்து இருக்கிறது. மனித வள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், முதலாளிகள் ஆகியோரின் ஆதரவுடன் கூடிய இந்த நிலையம், தொண்டூழியர்களை அதிகம் சேர்க்கும் முயற்சிகளை விரிவுபடுத்தப்போவதாகத் தெரிவித்தது.
இப்பாதைய தொண்டூழியர்களில் பெரும்பாலானோர், இங்குள்ள 45 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்களே ஆவர். விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் ஊழியர்களையும் தொண்டூழியர்களாகச் சேர்க்கப்போவதாக இந்த நிலையம் அறிவித்துள்ளது.