சிங்கப்பூரின் சீனப் புத்தாண்டு ரிவர் அங்பாவ் கொண்டாட்டத்தின் 34 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக அடுத்த ஆண்டில் அதற்குச் சீன சமூகம் ஏற்பாடு செய்யப்போகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாட்டுப் பொறுப்பில் இருந்து விலகி ஆலோசகர்களாகச் செயலாற்றுவார்கள். அந்தக் கொண்டாட்டத்திற்குச் சீன சமூகம் தலைமை ஏற்று நடத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ரிவர் அங்பாவ் கொண்டாட்டம் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 1 வரை நடக்கும் என்று அந்தக் கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழு நேற்று தெரிவித்தது.
சீன சமூகம் தலைமை ஏற்கும் புதிய ஏற்பாடு நிரந்தரமானதாக ஆக்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரியும்.
ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏற்பாட்டுக் குழுவுடன் தொடர்ந்து தங்களுடைய கருத்துகளையும் யோசனைகளையும் பகிர்ந்துகொள்வார்கள்.
ரிவர் அங்பாவ் கொண்டாட்டம் மரினா பே மிதவையில் நடக்கும். அந்த வருடாந்திர நிகழ்ச்சியில் வாண வேடிக்கைகள் நாள்தோறும் இரவு நேரத்தில் இடம்பெறும்.
வெளிநாட்டு, உள்நாட்டு கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் ஊஷூ கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் அரங்கேறும்.
சீனக் கலாசார உணவுக்கடை வீதியும் பிரம்மாண்டமாக இடம்பெற்று இருக்கும். அதில் 40 கடைகள் இடம்பெற்று இருக்கும். சிங்கப்பூருக்கே உரிய அறுசுவை உணவை அங்கு உண்டு மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ரிவர் அங்பாவ் கொண்டாட்டத்திற்கு சிங்கப்பூர் சீன குலவழிச் சங்கக் கூட்டமைப்பு, சிங்கப்பூர் சீன வர்த்தக தொழில் சபை, சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சிங்கப்பூர் சுற்றுலா வாரியம், மக்கள் கழகம் ஆகியவை ஏற்பாடு செய்கின்றன.
இந்தக் கொண்டாட்டம் 1987 முதல் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 மில்லியன் மக்களைக் கவர்ந்து ஈர்க்கும் மிகப் பெரிய கொண்டாட்டமாக இது பரிணமித்து உள்ளது.
அவர்களில் சுமார் 30 முதல் 35 விழுக்காட்டினர் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள். பெரும்பாலானவர்கள் சீனா, மலேசியா, பிரிட்டனில் இருந்து வருவார்கள் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் நேற்று தெரிவித்தது. கடந்த ஆண்டுகளைப் போலவே கவர்ச்சிகரமான பரிசுகளையும் வெல்லலாம்.