சிங்கப்பூர் வீவக நகர்ப் பகுதிகள் முழுவதும் மின்தூக்கிக் கூடங்களில் 6,000 மின்னிலக்க விளம்பரத் திரைகளை அமைத்து நிர்வகிப்பதற்கான ஏலக்குத்தகையை டிஎம்சிசி என்ற நிறுவனம் பெற்றிருக்கிறது.
இந்த நிறுவனம் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ், ஃபோகஸ் மீடியா (சீனா) என்ற இரண்டு நிறுவனங்களுக்கும் இடைப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இந்தக் கூட்டு நிறுவனத்துக்கு குத்தகையை வழங்கி இருக்கிறது.
இந்த விவரங்களை டிஎம்சிசி நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இதனையடுத்து மின்தூக்கிக் கூடங்களில் அமைக்கப்படும் மின்னிலக்கத் திரைகளில் செய்திகளையும் பயனுள்ள தகவல்களையும் மேலும் பல குடியிருப்பாளர்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தத் திரைகள் 2020 ஜூன் மாதம் அமைக்கப்படும். பெரும்பாலானவை மின்தூக்கிக் கூடங்களிலும் மற்றவை மின்தூக்கி உள்ளேயும் அமையும்.
டிஎம்சிசி நிறுவனம் இப்போது பல நகர்ப் பகுதிகளிலும் 8,000 திரைகளை இயக்கி வருகிறது.
நகர மன்றங்கள், மக்கள் கழகம் இதர பல பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து டிஎம்சிசி நிறுவனம் வீவக குடியிருப்புவாசிகளுக்குப் பயனுள்ள, பொருத்தமான தகவல்களையும் செய்திகளையும் வழங்கி வருகிறது.

