பூகிஸ் எம்ஆர்டி நிலையத்தில் தனிநபர் நடமாட்ட சாதனத்தைப் பயன்படுத்தும் முதியவர் ஒருவர் எஸ்எம்ஆர்டி நிறுவன ஊழியர் ஒருவரைத் தாக்கும் காணொளியின் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் 21ஆம் தேதி நிகழ்ந்த அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளியை கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) ஸ்டீவ் கோ எனும் ஃபேஸ்புக் பயனாளர் பதிவிட்டிருந்தார்.
(காணொளியை முழுமையாகக் காண Full Screen Modeக்கு செல்லுங்கள்.)
85,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் அந்தக் காணொளியைக் கண்டனர்.
எட்டு வினாடிகளுக்கு நீடித்த அந்தக் காணொளியில் தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவர் எஸ்எம்ஆர்டி ஊழியர் ஒருவரைத் தாக்குவது, காலால் உதைப்பது போன்றவற்றைக் காண முடிந்தது.
அவரிடமிருந்து தப்பிக்கும் விதமாக அந்த ஊழியர் பின்னோக்கி நகர்ந்து செல்வதும் காணொளியில் தெரிந்தது.
சாய்வான ஓரிடத்தை அடைந்ததும் இருவரது ஓட்டமும் நிற்பதுடன் அந்த முதியவர் அவரது தனிநபர் நடமாட்டச் சாதனத்திலிருந்து சரிந்து தரையில் அமரும் நிலைக்கு ஆளானார்.
முதியவரின் தனிநபர் நமாட்டச் சாதனத்தில், “என்னுடைய ஒருநாள் உணவுச் செலவுக்கு $10 மட்டுமே தேவைப்படும். நான் இன்று பசியுடனே இருக்க விட்டுவிடாதீர்கள்,” என்பதைக் குறிக்கும் ஆங்கில வாசகத்தைத் தாங்கிய அட்டை ஒன்று தொங்கிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
நிலையத்தைப் பார்வையிட்டு வந்த எஸ்எம்ஆர்டி ஊழியர், அந்த முதியவரிடம் இங்கு பொருட்களை விற்க அனுமதி இல்லை என்று கூறியதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து முதியவருக்கும் எஸ்எம்ஆர்டி ஊழியருக்கும் இடையே வாய்ச்சண்டை மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் தொடர்பில் போலிசில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் உதவி வருவதாகவும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
தங்கள் ஊழியர்கள் மீதான தாக்குதல்கள், தவறான வார்த்தைப் பிரயோகம் போன்றவை போலிசில் புகார் செய்யப்படும் என்று கூறிய எஸ்எம்ஆர்டி, எங்களது ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்க கடப்பாடு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity