எம்ஆர்டி நிலையங்ளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களின் குட்டைப் பாவாடைக்குள் படமெடுத்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவருக்கு 18 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கல்வியால் மனவுளைச்சல் ஏற்பட்டதை அடுத்து பெண்களின் பாவாடைக்குள் தமது கைபேசியைப் பயன்படுத்திப் படமெடுக்கத் தொடங்கியதாக 24 வயது சோங் யென் பின் தெரிவித்தார்.
பெண்களின் பிட்டங்களைப் படமெடுத்து அவற்றைப் பார்க்கும் பழக்கத்துக்கு தாம் அடிமையாகியதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோ பாயோ பேருந்து நிலையத்தில் பெண் ஒருவருக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த சோங் சந்தேகத்துக்குரிய வகையில் தமது கைபேசியை அந்தப் பெண்ணுக்குப் பின்னால் சாய்த்து வைத்திருந்தததை பொதுமக்களில் ஒருவர் பார்த்தார்.
இதுகுறித்து டிரான்ஸ்காம் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். தோ பாயோ எம்ஆர்டி நிலையத்தில் சோங்கைப் பார்த்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
சோங்கின் கைபேசியை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் பெண்களின் பாவாடைகளுக்குள் எடுக்கப்பட்ட படங்கள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
26க்கும் மேற்பட்ட அத்தகைய படங்கள் இருந்தன.