ஆறு வெவ்வேறு பெண்களை எம்ஆர்டி நிலையங்கள் உட்பட பல இடங்களில் பின்தொடர்ந்து சென்று அவர்களின் பாவாடைக்குள் படம் எடுத்ததன் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை சியாங் வெய் ஷெங் (படம்), 19, நேற்று ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரி மாணவரான சியாங், இவ்வாண்டு மார்ச் 21ல், மாலை 5 மணியளவில் ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில் அமைந்திருந்த மாடிப்படிகளில் ஒரு பெண் ஏறிச் செல்வதைக் கண்டதாகவும் பெண்ணின் பின்னால் நின்றவாறு தன் கைபேசியில் பல படங்களைப் பிடித்ததாகவும் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆறு நாட்கள் கழித்து சிங்கப்பூர் எக்ஸ்போ பகுதியில் உள்ள மின்படிகளில் சென்ற ஒரு பெண்ணின் பின்னால் நின்று மீண்டும் சியாங் அதே மாதிரி பாவாடைக்குள் படம் எடுத்ததாக சொல்லப்பட்டது.
அதற்குப் பின்னர் ஏப்ரல் 9 அன்று, செம்பவாங் எம்ஆர்டி நிலையத்தின் மின்படிகளில் சென்றுகொண்டிருந்த ஒரு 28 வயது பெண்ணின் பாவாடைக்குள் சியாங் படம் எடுத்தபோது பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தன்னிடம் முறையிட்ட பெண்ணிடம் சியாங், தான் பாவாடைக்குள் படம் எடுத்ததாக ஒப்புக்கொண்டதாகவும் அதைத் தொடர்ந்து எம்ஆர்டி நிலைய அதிகாரி போலிசாரிடம் தகவல் தெரிவித்து சியாங் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதிகாரிகள் சியாங்கின் கைபேசியைப் பறிமுதல் செய்து சோதனையிட்டதில் மொத்தம் ஆறு பெண்களின் பாவாடைக்குள் படம் எடுத்தது தெரிய வந்தது.
கைபேசியில் இருந்த ஒரு மறையாக்கச் செயலியில் படங்களை வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது.
இதன் தொடர்பில் நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணைக்கு சியாங் தகுதியுடையவரா என்பது குறித்து அறிக்கை தருமாறு மாவட்ட நீதிபதி சியா சி-லிங் கோரியுள்ளார். அடுத்த மாதம் 17ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும்.