நாட்டில் ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது என்று பத்தில் எழுவர் கூறினாலும் வெளிநாட்டு ஊழியர்கள் தேவை என்று நான்கில் ஒருவர் மட்டுமே கூறும் நிலை உள்ளது.
அனைத்துலக ஊழியர் தினத்தை முன்னிட்டு நான்கு ஆசிய நாடுகளை மையமாகக் கொண்டு அனைத்துலக தொழிலாளர் அமைப்பும் ஐ.நாவின் மகளிர் அணியும் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு இதைத் தெரிவித்துள்ளது.
இதன்படி வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பாதிக்கும் மேற்பட்டோர் நம்புகின்றனர்.
அத்துடன் நாட்டின் கலாசார, மரபுடைமைக்கும் வெளிநாட்டு ஊழியர்களால் மிரட்டல் ஏற்படுவதாக இவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஜப்பான், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இதே போன்ற கருத்துகள் திரட்டப்பட்டன. ஆனால் இம்மூன்று நாடுகளைச் சேர்ந்தோரைக் காட்டிலும் சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் மீது கொண்டுள்ள எதிர்மறையான எண்ணம் சற்று மேம்பட்டிருந்தது.
புலம்பெயர்தல் அதிகரித்திருந்தாலும் வெளிநாட்டு ஊழியர்கள் மீது கொண்டுள்ள எதிர்மறையான எண்ணங்கள் கடந்த பத்தாண்டில் குறைந்துள்ளதாக அறிக்கை உணர்த்துகிறது.