‘கிராப்ஃபுட்’ விநியோகிப்பாளர் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள், சரக்கு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. கம்பாஸ் அவென்யூவில் இன்று (டிசம்பர் 20) காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் அந்த 42 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டுபோனார்.
விபத்து குறித்து காலை 11.50 மணியளவில் தகவல் வந்ததாக போலிஸ் தெரிவித்தது. சாலையில் ஒரு மோட்டார்சைக்கிள் விழுந்து கிடப்பதையும் அதை ஒட்டி போலிஸ் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததையும் விபத்துக்குப் பின் எடுக்கப்பட்ட படங்கள் காட்டின.
‘கிராப்’ சின்னம் அச்சிடப்பட்ட பச்சை நிற உணவு விநியோகப் பை ஒன்றும் அந்த மோட்டார்சைக்கிளில் இருந்தது.
இந்தச் சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறிய ‘கிராப்ஃபுட்’ நிறுவனத்தின் பேச்சாளர், இந்த துயரமான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்ய பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் சொன்னார்.
விபத்து குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity