தங்கக் கட்டி மோசடியில் 83 வயதான தொழிலதிபர் ஒருவர் கடந்த வாரம் 120,000 வெள்ளியை இழந்துள்ளார். இதற்கு முன் தங்கக் கட்டி மோசடி 2014ஆம் ஆண்டில் நடந்துள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாதபோதிலும் ஊடகங்களிடம் அதுகுறித்துப் பேச ஒப்புக்கொண்ட அந்த தொழிலதிபர், கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) அரிதான சீன குடும்பப் பெயரைக்கொண்ட ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறினார்.
தொலைபேசியில் அழைத்தவர், அந்த முதியவரின் கடையில் இருந்து தமது நண்பர் பொருட்களை வாங்கியிருப்பதாகக் கூறியதுடன், வேறு ஏதேனும் குல சங்கங்கள் இருக்கிறதா என்று கேட்டார். அவரை சாப்பிடவும் கூப்பிட்டுள்ளார்.
சந்தேகமும் இல்லாமல் அந்த ஆடவரையும் அவரது மனைவி என்று கூறிக்கொண்ட பெண்ணையும் தொழிலதிபர் சந்தித்தார்.
சீன நாட்டவர்கள் என்று நம்பப்படும் 40களில் இருந்த அந்த தம்பதி, ஹாலந்து வில்லேஜில் ஒரு கட்டுமானத் தளத்தில் தோண்டியபோது, ஓர் உயிலும் 20 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளையும் கொண்ட ஒரு தாழியைக் கண்டுபிடித்ததாக தொழிலதிபரிடம் தெரிவித்தனர்.
“தங்க கட்டிகள் உண்மையானவையா அல்லது போலி என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் அந்தக் கட்டிகளிலிருந்து வெட்டபட்டதாக ஒரு சிறிய துண்டு என்னிடம் காண்பித்தனர்,” என்று அந்த முதியவர் கூறினார்.
பின்னர் மூவரும் அடகு கடை ஒன்றுக்குச் சென்று, அந்த கட்டியைச் சோதித்தனர். அது தங்கம்தான் என்றும் அதன் மதிப்பு 230 வெள்ளி என்றும் உறுதி செய்யப்பட்டது.
“அந்த ஆடவர், தானும் தனது மனைவியும் சிங்கப்பூரிலிருந்து கிளம்ப இருப்பதால், தாழியில் கண்டெடுத்த தங்கக் கட்டிகளையும் மற்றப் பொருட்களையும் என்னிடம் விற்க விரும்புவதாகக் கூறினார். தங்கக் கட்டிகள் சுங்கச் சோதனையில் பிரச்சினையாகும்,” என்றார் அந்த முதியவர்.
தம்பதியிடமிருந்து 159 போலி தங்கக் கட்டிகள், 6 போலி தங்க புத்தர் சிலைகள், பழைய சீன நாணயம் ஆகியவற்றை $120,000 ரொக்கமாக கொடுத்து முதியவர் வாங்கியுள்ளார்.
அடகுக் கடை அந்த தங்கக் கட்டிகளை வாங்க முடியாது என்றும் அவை போலியானவை என்றும் சொன்னபோது, தாம் ஏமாற்றப்பட்டதை தொழிலதிபர் உணர்ந்தார்.
உடனே தமது மகளை உதவிக்கு அழைத்தார். அச்சமயம் தம்பதியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன.
“அந்த நேரத்தில், நான் எதையும் சந்தேகிக்கவில்லை, குழம்பிய நிலையில் இருந்தேன். என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், என்னைப் போன்ற மற்ற முதியவர்கள் இத்தகைய மோசடிக்காரர்களுக்கு இரையாக மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று பாதிக்கப்பட்டவர் கூறினார்.
சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை நடந்து வருகிறது. எப்போதும் பெயர்பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட, நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்குமாறும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் வர்த்தக குற்றப் பிரிவின் அதிகாரியான, துணை சூப்பிரின்டெண்டன்ட் ஸ்டான்லி குயூ பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.