இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்காக இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அரசாங்கம் $2.9 பில்லியனை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) செலவிட்டுள்ளது. ஏறத்தாழ 170,400 வீடுகளில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. அதுபோக, 132,300 வீடுகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
1986ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட மொத்தம் 320,000 வீடுகள் இந்த மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தகுதி பெற்றன.
இந்த விவரங்களை நேற்று வெளியிட்ட வீவக, எஞ்சிய மேம்பாட்டுப் பணிகள் கட்டங்கட்டமாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தது.
வீட்டுச் சூழலில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
வீட்டிற்குள்ளே மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தும் இத்திட்டம், பழைய வீடுகள் தொடர்பான பொதுவான பராமரிப்புப் பிரச்சினைகளை வீட்டு உரிமையாளர்கள் சரிசெய்ய உதவி வருகிறது.
1986ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட, முந்தைய பிரதான மேம்பாட்டுத் திட்டத்திற்கு உட்படுத்தப்படாத வீவக வீடுகளுக்கே இத்திட்டம் முன்னதாக வழங்கப்பட்டது.
1987க்கும் 1997ஆம் ஆண்டிற்கும் இடையே கட்டப்பட்ட வீடுகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் எனப் பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இதன் மூலம் கூடுதலாக 230,000 வீடுகள் பலனடையும்.
பொதுச் சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பான முக்கிய மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தும் இத்திட்டத்திற்கான செலவை அரசாங்கம் ஏற்கிறது.
இதுபோக, வீட்டு உரிமையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மேம்பாட்டுப் பணிகளையும் அவர்கள் தேர்வு செய்யலாம். அவர்கள் தேர்வு செய்யும் பணிகளுக்கான செலவை அவர்களே ஏற்க வேண்டும்.
இத்திட்டத்திற்கு தகுதிபெறும் ஒரு புளோக்கில் உள்ள குடும்பங்களில் குறைந்தது நான்கில் மூன்று குடும்பங்கள் விரும்பினால் மட்டுமே, இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
இத்திட்டத்தைப் பெற விரும்பும் வயதான, எளிதில் ஆபத்துக்குள்ளாக வாய்ப்புடைய குடியிருப்பாளர்களுக்கு மேம்பாட்டுத் தெரிவு உண்டு. ‘துடிப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம்’ (ஈஸ்) என்று அழைக்கப்படும் இது, வீட்டிற்குள் மூத்தோர் எளிதாக நடமாட உதவும் வீட்டு வசதிகளைப் பெற வகை செய்யும். கழிவறையில் பிடிமான வசதிகளை ஏற்படுத்தித் தருவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
65 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்த குடும்ப உறுப்பினரைக் கொண்ட சிங்கப்பூர் குடும்பங்கள் மட்டும் இத்திட்டத்திற்குத் தகுதி பெற முடியும்.
அல்லது, தினமும் செய்யக்கூடிய வீட்டு நடவடிக்கைகளில் ஒன்றைச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் 60க்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டோரைக் கொண்டுள்ள குடும்பங்களும் இதற்குத் தகுதி பெறலாம்.
இவ்வாண்டு அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி, 206,000க்கும் அதிகமான குடும்பங்கள் ‘ஈஸ்’ திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன.