சிங்கப்பூர் நீரிணையில் இருள் சூழ்ந்த பகுதிகளில் கடற்கொள்ளையர்கள் இரண்டு கப்பல்களில் தாக்குல் நடத்தினர். இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள்.
இவற்றையும் சேர்த்து கடந்த நான்கு நாட்களில் நிகழ்ந்திருக்கும் ஐந்தாவது கடற்கொள்ளையர் தாக்குதல் இது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் அந்த இரு தாக்குதல்களும் நிகழ்ந்தன. இரண்டு மணி நேர இடைவெளியில் சரக்குக் கப்பலிலும் எண்ணெய்க் கப்பலிலும் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
கப்பல் ஊழியல்களைக் கட்டிப்போட்டு கப்பலில் இருந்த பொருட்களைக் கொள்ளையடிக்க அவர்கள் முயன்றனர். ஆனால் அபாய எச்சரிக்கை ஒலி எழும்பியதைத் தொடர்ந்து இரு சம்பவங்களிலும் எந்தவொரு பொருளையும் கொள்ளையடிக்க இயலாமல் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை தனித்தனியாக நிகழ்ந்த மூன்று கொள்ளை முயற்சி சம்பவங்களைத் தொடர்ந்து ஆசிய கப்பல்களுக்கு எதிரான ஆயுதக்கொள்ளை தகவல் பரிமாற்ற மையம் எச்சரிக்கையாக இருக்கு மாறு விழிப்புநிலை தகவலை வெளியிட்டிருந்தது.
சிங்கப்பூர் நீரிணையில் இவ்வாண்டில் இதுவரை 29 கடற்கொள்ளை தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளதாக மையம் தெரிவித்தது. இவற்றில் 15 சம்பவங்கள் மேற்கு நோக்கிய வழியில் நிகழ்ந்தன.