ஈசூனில் உள்ள ‘நார்த்பாய்ண்ட் சிட்டி’ கடைத்தொகுதியில் மின்படியைப் பயன்படுத்திய முதியோர் மூவர் தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இச்சம்பவம் நடந்ததாக ‘த நியூ பேப்பர்’ நாளிதழ் தெரிவித்தது.
கீழே விழுந்தவர்களில் இருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் நால்வர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அன்று மாலை 5.30 மணியளவில் மேல்மாடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மின்படியில் அந்த முதியோர் நின்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த மூவருக்கு 60 முதல் 70 வயது வரை இருக்கும்.
சம்பவம் நிகழ்ந்தபோது அருகில் இருந்தவர்கள் உடனே மின்படியில் உள்ள அபாய பொத்தானை அழுத்தி மின்படியை நிறுத்தியதாகவும் கூறப்பட்டது.
இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த கடைத்தொகுதி நிர்வாகத்தினர், மின்படியில் கோளாறு எதுவும் இருந்ததாக தெரியவில்லை என்று கூறினர். அன்று இரவு 9.15 மணியளவில் மின்படி மீண்டும் இயங்கத் தொடங்கியதாகவும் கூறப்பட்டது.