சூரியன், சந்திரன், குரு, சனி, புதன், கேது ஆகிய ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள். இந்த ஆறு கிரகங்களும் தனுசு ராசியில் சேர்ந்திருக்கும் நிலை நாளை முதல் 27ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதேநேரத்தில் நாளை மறுதினம் முழு சூரிய கிரகணம் நடைபெறுகிறது.
இது குறித்து பல அனுமானங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. இதனால் பாதிப்பு ஏது மில்லை, மக்கள் அச்சப்படத்தேவை யில்லை என்று அறிவியலாளர்களும் சோதிடர்களும் தெரிவித்துள்ளனர்.
இது ஓர் அறிவியல் நிகழ்வு நாம் தொலைநோக்கி வழியாகக் காணலாம் என்ற சிங்கப்பூர் விண்வெளி ஆய்வுச் சங்கத்தை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவரான திரு ஆர். கலைமணி இதனால் ஆபத்தில்லை என்றார்.
“இந்த ஆண்டு வியாழன், சனி, வெள்ளி, புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கு அருகே கிட்டத்தட்ட ஒரே வட்டத்தில் நகர்கின்றன. தொலைநோக்கி வழி இதனைக் காணலாம். இந்த வட்டத்தை ஜோதிடர்கள் ராசி வீடு என்பர்,” என்றார் அவர்.
“சந்திரனின் நகர்வால் ஏற்படும் கடல் பெருக்கத்தைத் தவிர, கிரங்களால் அறிவியல் ரீதியாக எந்தத் தீங்கும் ஏற்படப்போவதில்லை. அதுபோலத்தான் நாளை நடக்கவுள்ள சூரிய கிரகணத்தால் எந்த இயற்கை அசம்பாவிதங்களும் நிக ழாது,” என்றார் ரு ஆர். கலைமணி.
“இது குறித்து பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக கவலைப்படத் தேவையில்லை தனுசு ராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கையில் வியாழனும் இணைந்திருப்பதால் பிரச்சினைகள் எல்லை மீறாமல் தீர்ந்துவிடும்,” என்றார் சிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணா ஜோதிட நிலையத்தின் லக்ஷ்மி சுப்ரமணிய அய்யர்.
“இந்தக் கிரக சேர்க்கையைப் பற்றி அதிகம் சிந்தனை செய்யாமல் மக்கள் இறை வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. அனுமர் ஜெயந்தி முன்னிட்ட சிறப்பு வழிபாடுகள் ஆலயங்களின் நடைபெறும். பிரச்சினைகள் கடவுள் நம்பிக்கை யால் தீர்ந்துவிடும்,” என்றார் புனித மரம் பாலசுப்பிரமணிய ஆலயத்தின் மூத்த சமய ஆலோசகரும் மூத்த சிவாச்சாரியருமான பாலசந்திர சிவாச்சாரியர்.
“கோள்கள் இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு “அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை” என்று சென்னையைச் சேர்ந்த பிர்லா கோளரங்க இயக்குநர் சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
"சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. கெப்ளரின் 3-வது விதிப்படி சூரியன் மற்றும் கோள்கள் இருக்கும் தொலைவை பொறுத்து அது சூரியனை சுற்றிவரும் காலம் மாறுபடும். சில நேரங்களில் ஒரு கோள் மற்றொரு கோளை முந்தி செல்வதை போலவும், அருகருகே அமைந்திருப்பது போலவும் தோன்றும். உண்மையில் அவற்றிற்கு இடையே பல கோடி கிலோ மீட்டர் தூரம் விலகி உள்ளன. எனவே இதுபோன்ற கோள்கள் ஒருங்கமைவது அவ்வப்போது நிகழும்,” என்றார் அவர்.
“இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதன் ஒருங்கிணைந்த ஈர்ப்பு விசை நம்மை எந்த வகையிலும் பாதிக்காது. நிலவும், சூரியனும் ஒருங்கே அமைந்து இருப்பதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் நிகழ்வது போல கடல் அலை எழுச்சி ஏற்படும்.
“இது மிக அதிகமாகவோ அல்லது அழிவை உண்டாக்கும் வகையில் இருக்காது. ஆனால் வழக்கமான அமாவாசை காலங்களில் இருப்பது போல கடல் அலை எழுச்சி இருக்கும்.
“இதுதவிர பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.