பொங்கோலில் உள்ள ‘ஷெல்’ பெட்ரோல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர், காரை நகர்த்த சொன்னதற்காக அவரது முகத்தில் இருமுறை குத்தினார் கார் ஓட்டுநர் கீ கியன் சோங்.
பெட்ரோல் நிலையத்தில் உள்ள கடையில் பானம் வாங்குவதற்காக அன்றிரவு 9.40 மணியளவில் காரை அங்கு ஒட்டிச் சென்றார் கீ. அங்கு அவர் நிறுத்திய கார், பெட்ரோல் நிரப்ப காத்திருந்த மற்ற வாகனங்களுக்கு இடையூறாக இருந்தது.
இதைக் கவனித்த பெட்ரோல் நிலைய ஊழியர் கலைராஜ் சந்தகுமாரி, 22, கீயை அணுகி காரை நகர்த்துமாறு கேட்டுக்கொண்டார். இதனால் கோபமடைந்த கீ, அவரது முகத்தில் குத்தினார். அந்த நேரத்தில் பெட்ரோல் நிலையத்தில் இருந்த மற்றவர்கள் கீயைத் தடுத்து நிறுத்தினர்.
ஓராண்டு கழித்து நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், குடித்துவிட்டு கார் ஓட்டிய கீ, 42, சைனாடவுன் பகுதியின் இயூ தோங் சென் ஸ்திரீட்டில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தினார். அச்சம்பவம் இவ்வாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி நிகழ்ந்தது.
அன்று அதிகாலை 2.35 மணியளவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸ் அதிகாரி ஒருவர், பேருந்து நிறுத்தத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்ததையும் அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் கீ அமர்ந்திருந்ததையும் கண்டார்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உடனிருந்த அதிகாரிகளுடன் சேர்ந்து அந்த அதிகாரி கீயிடம் சோதனை நடத்த முற்பட்டார். ஆனால், அதற்கு ஒத்துழைப்பு தர மறுத்த கீ, அவர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார்.
இதையடுத்து கீயை அதிகாரிகள் கைது செய்தனர். கீ அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருப்பது பின்னர் தெரியவந்தது. அவரது மூச்சுக்காற்றை வெளிப்படுத்தி மது அளவைச் சோதிக்கும் முறையை நடத்தியதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்கிற்கும் அதிகமான அளவு மது, கீயின் மூச்சில் வெளிப்பட்டது.
மேற்கூறப்பட்ட இரு சம்பவங்களில் லீ புரிந்த குற்றங்களுக்காக அவருக்கு $7,000 அபராதமும் வாகனம் ஓட்ட ஈராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கீயைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் எவரும் வாதிடவில்லை. நான்கு, 11, 13 வயதில் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான கீ, தமக்கு மறுவாய்ப்பு வழங்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
கீவுக்கு தண்டனை விதிக்கும்போது கருத்துக் கூறிய நீதிபதி ஹமிடா இப்ராஹிம், “நீங்கள் புரிந்த இந்தக் குற்றங்களுக்காக வருத்தப்படுவீர்கள் என நம்புகிறேன்,” என்றார்.