அடுத்த ஆண்டிலிருந்து அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் கட்டாய மருத்துவக் காப்புறுதியான மெடிஷீல்டு லைஃப் திட்டத்திலிருந்து கூடுதல் தொகையைப் பெறலாம் என சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தின் கோரிக்கை வரம்பு உயர்த்தப்படுவதே இதற்குக் காரணம்.
இதனால் ஆண்டுக்கு ஏறத்தாழ 90,000 நோயாளிகள் பலன் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெடிஷீல்டு லைஃப் என்பது பெரிய தொகையிலான மருத்துவ
மனைக் கட்டணங்கள், ரத்த சுத்திகரிப்பு, கீமோதெரபி போன்ற குறிப்பிட்ட சில விலை உயர்ந்த வெளிநோயாளி சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஆகியவற்றை செலுத்த உதவும் அடிப்படை காப்புறுதித் திட்டம்.
சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் அனைவருக்கும் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் உண்டு. இதை மத்திய சேமநிதி நிர்வகிக்கிறது.
சுகாதார அமைச்சின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்வோர் கட்டணத்தைச் செலுத்த மெடிஷீல்டு லைஃப் திட்டத்திலிருந்து பணம் கோரலாம்.
வெவ்வேறு அறுவை சிகிச்சை
களுக்குத் தற்போது ஏழு படிநிலைகள் கொண்ட மெடிஷீல்டு லைஃப் கோரிக்கை வரம்புகள் உள்ளன. இது அடுத்த ஆண்டிலிருந்து 21 படிநிலைகளுக்கு மாறும். அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் இந்தப் புதிய அணுகுமுறையின்கீழ் வருவர். அதன்படி, அவர்களுக்கு மெடிஷீல்டு லைஃப் திட்டத்திலிருந்து கூடுதல் வழங்கீடு கிடைக்கக்கூடும். உதாரணத்திற்கு, தற்போதைய நிலையின்படி சிக்கலான கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஒருவர் எளிதான கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஒருவரைப் போலவே ஒரே அளவிலான மெடிஷீல்டு லைஃப் வழங்கீட்டைப் பெறக்கூடும்.
திருத்தப்பட்ட வரம்புகளின்படி, சிக்கலான கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அந்த நோயாளிக்கு $2,180 வரை வழங்கீடு கிடைக்கக்கூடும்.
இது தற்போதைய நிலையைவிட $700 அதிகம்.
எளிதான கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளி $1,800 வரையிலான வழங்கீட்டைப் பெறக்கூடும்.
நோயாளி ஒருவரின் $4,477 மருத்துவக் கட்டணத்திலிருந்து $4.50 மட்டுமே மெடிஷீல்டு லைஃப் திட்டத்தால் செலுத்தப்பட்டது என்ற செய்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளியானதை அடுத்து அந்தக் காப்புறுதித் திட்டம் குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு ஏன் முழுமையான மெடிஷீல்டு லைஃப் வழங்கீடு கிடைப்பதில்லை எனக் கடந்த ஜனவரி மாதத்தில் சுகாதாரத்துக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியிருந்தது.
விலை உயர்ந்த சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்குக் கூடுதல் வழங்கீடு வழங்க புதிய படிநிலைகளின் அறிமுகம் வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இருப்பினும், தற்போதைக்கு மெடிஷீல்டு லைஃப் திட்டத்தின் சந்தா தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அமைச்சு தெரிவித்தது.