ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள லக்கி பிளாசாவுக்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோசமான கார் விபத்தில் உயிரிழந்த இரு இல்லப் பணிப்பெண்களில் ஒருவரின் மகன், தமது தாயார் இறந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தாயார் அபிகேல் டனாவ் லெஸ்டேவின் மரணம் தமது குடும்பத்தைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஜெஃப் உமோகுவிட் லெஸ்டே எனும் பெயர் கொண்ட அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (டிசம்பர் 30) பதிவிட்டார். வட பிலிப்பீன்சில் பேசப்படும் மொழியில் அவர் அந்தப் பதிவை வெளியிட்டார்.
தமது தாயார் 14 ஆண்டுகளாக வெளிநாடுகளில் பணியாற்றி வந்ததாக அவர் கூறினார். பிலிப்பீன்சின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ககாயன் மாநிலத்தைச் சேர்ந்தவர் திரு ஜெஃப் என அவர் ஃபேஸ்புக் பக்கம் குறிப்பிடுகிறது.
தமக்கு இளம் உடன்பிறப்பு ஒருவர் இருப்பதாக தெரிவித்த அவர், தாயாருடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாட நீண்டகாலமாக தாங்கள் ஏங்கியதாகச் சொன்னார். 2016ஆம் ஆண்டிலிருந்து தங்களது தாயாரைத் தாங்கள் நேரில் சந்தித்ததில்லை என அவர் கூறினார்.
“நமது வாழ்க்கை எளிதாக இல்லாவிடிலும் தயவுசெய்து நாடு திரும்புங்கள். உங்களை நாங்கள் தேடுகிறோம். நீங்கள் இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது,” என்று திரு ஜெஃப் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
லக்கி பிளாசாவுக்குப் பின்புறம் நட்மேக் சாலையோரம் உள்ள நடைபாதையில் ஞாயிறு பிற்பகல் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய ஆறு பிலிப்பீன்ஸ் நாட்டு இல்லப் பணிப்பெண்களில் திரு ஜெஃபின் தாயாரும் ஒருவர்.
நெருங்கிய தோழிகளான அந்த அறுவரும் புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்காக நடைபாதையில் ஒன்றுதிரண்டிருந்தனர். அவர்களைத் திடீரென மோதிய கறுப்பு நிற ஹோண்டா கார், அங்கிருந்த தடுப்புவேலியை உடைத்துக்கொண்டு கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் உள்ள கார்நிறுத்துமிட சாலையில் விழுந்தது. விபத்தின் தாக்கத்தினால் பெண்களில் ஒருவர் அந்த காருக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
$156,000 நிதி திரட்டப்பட்டுள்ளது
இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏறக்குறைய $156,000 நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி திரட்டி வரும் இல்லப் பணிப்பெண்கள் நிலையம், இன்று பிற்பகல் நிலவரப்படி கிட்டத்தட்ட 1,420 நன்கொடையாளர்களிடமிருந்து இந்தத் தொகையைத் திரட்டியது. நேற்று காலை 10.20 மணியளவில் $57,000 திரட்டப்பட்டிருந்த நிதி, பிற்பகல் 3 மணியளவில் கிட்டத்தட்ட மும்முடங்காக அதிகரித்தது.
நிதி திரட்டு நடவடிக்கை மூலம் பெறப்படும் தொகை, காயமடைந்த நான்கு பணிப்பெண்களிடமும் உயிரிழந்த இரு பணிப்பெண்களின் குடும்பத்தாரிடமும் வழங்கப்படும்.
‘நானும் உயிரிழந்திருக்கக்கூடும்’
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக லக்கி பிளாசாவுக்கு வெளியே ஒன்றுதிரண்டிருந்தவர்களில் லூஸ் ரிவேரா என்பவரும் ஒருவர்.
நெருங்கிய நண்பரின் அழைப்பை ஏற்று தாம் அன்று அக்கடைத்தொகுதிக்கு வெளியே உள்ள நடைபாதைக்கு வந்திருந்ததாகக் கூறிய அவர், ஒன்றுகூடலுக்குப் பிறகு சாக்லட் வாங்குவதற்காக தாம் கடைத்தொகுதிக்குள்ளே சென்றதாகச் சொன்னார்.
“சற்று நேரம் கடைத்தொகுதிக்கு உள்ளே போய் வருகிறேன் என நண்பர்களிடம் கூறிவிட்டு சென்றேன். ஆனால், அவர்களில் இருவரை நான் கடைசி முறையாக பார்ப்பேன் என சற்றும் நினைக்கவில்லை
“அந்த இடத்தைவிட்டு நான் புறப்பட்டிருக்காவிட்டால் நானும் உயிரிழந்திருக்கக்கூடும்,” என்று கண்ணீர் மல்க ரிவேரா கூறினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity