சிங்கப்பூரின் பொய்ச் செய்தி சட்டம் தொடர்பில் புளூம்பெர்க், சௌத் சைனா மார்னிங் போஸ்ட் ஆகிய சஞ்சிகைகள் வெளியிட்ட கருத்துகளை அரசாங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
புளூம்பெர்க் மூன்று விதமாக வெளியிட்ட ஒரு கட்டுரையில், கருத்துச் சுதந்திரத்தையும் மாற்றுக் கருத்துகளையும் ஒடுக்க பொய்ச் செய்தி சட்டத்தை சிங்கப்பூர் அரசாங்கம் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டிருப்பது உண்மைக்கு மாறானது என தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் பத்திரிகைச் செயலாளர் ஹோ ஹுவெய் லிங் தெரிவித்துள்ளார்.
போஃப்மா எனப்படும் இணையப் பொய்களுக்கு எதிராகப் பாதுகாத்தல் சட்டம், தகவலைத் திருத்தி வெளியிடுவதன் தொடர்பில் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். ‘எந்தவொரு தகவலும் கருத்தும் ஒடுக்கப்படவில்லை’ என்று புளூம்பெர்க் ஊடகத்துக்கு அனுப்பிய பதிலில் திருவாட்டி ஹோ குறிப்பிட்டுள்ளார்.
இச்சட்டம் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் விதத்தையும் புளூம்பெர்க் குறைகூறியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேபோன்ற ஒரு பதிலுரைப்பை சௌத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாளுக்கு ஹாங்காங்கிற்கான சிங்கப்பூரின் தூதர் ஃபூ டியோ லீ அனுப்பி உள்ளார்.