நாட்டின் ஆகப் பழமையான, அதிகமாகப் பயன்படுத்தப்படும் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு எம்ஆர்டி பாதைகளைப் புதுப்பிக்கும் திட்டத்திற்காக $2.5 பில்லியன் செலவிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று கூறினார்.
நேற்று காலை புக்கிட் பாத்தோக் எம்ஆர்டி நிலையத்தைப் பார்வையிட்ட திரு கோ, பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் இப்புதுப்பிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தற்போது நடை பெறுவதாகவும் தெரிவித்தார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் மின் வழங்கல் அமைப்பு, தட மின்சுற்றுகள், முதலாம் தலைமுறை ரயில்கள் ஆகியவை மாற்றப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே திட்டத்தின் முதல் கட்டத்தின்போது 30 ஆண்டுகளுக்கு முன் இயங்கத் தொடங்கிய ரயில் துணை பாலங்கள், இரு பாதைகளின் சமிக்ஞை அமைப்பு ஆகியவை மாற்றப்பட்டன.
தற்போது நடந்து வரும் மின் வழங்கல் அமைப்பின் புதுப்பிப்புப் பணிகளே ஆகச் சிக்கலானது என்று தெரிவித்த திரு கோ, கிட்டத்தட்ட 40 விழுக்காட்டுப் பணிகள் முடிந்திருப்பதாக சொன்னார்.
நிலையங்களில் உள்ள 171 துணை நிலையங்களில் கிட்டத்தட்ட 1,300 கிலோமீட்டர் நீளமுடைய மின்சாரக் கம்பிவடங்கள் உட்பட பல்வேறு சாதனங்கள் மாற்றப்படவுள்ளன.
2013ஆம் ஆண்டில் தொடங்கிய புதுப்பிப்புத் திட்டம், 2024ஆம் ஆண்டில் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட பின், இரு தடங்களிலும் கூடுதல் ரயில்கள் செல்ல முடியும். இதனால் ரயிலுக்காகக் காத்திருக்கும் நேரமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.