பெற்றோர் மணவிலக்கு பெறும்போது, பிள்ளைகளின் வாழ்க்கை சிக்கலாகலாம். குறிப்பாக, அந்தப் பிள்ளை பள்ளி செல்லும் பிள்ளையாக இருந்தால். ஒருவர் வீட்டை வைத்துக்கொள்வார். மற்றவர் தற்காலிக இடத்தில் தங்குவார். பிள்ளை இருவருக்கும் இடையில் மாட்டிக்கொள்ளும். நிரந்தரமான தங்குமிடம் இல்லாததால் பிள்ளை நீண்டகாலம் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும்.
வாடகை வீட்டில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களில் இந்தப் பிரச்சினை பூதாகரமாக இருக்கும். அப்பிள்ளை, சக மாணவர்களைக் காட்டிலும் பின்தங்கி விடும். இது ஏற்றத்தாழ்வு இடைவெளியை மோசமாக்கும்.
சமுதாயம் இன்று எதிர்நோக்கும் ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கலான சவால்களையும் பிரச்சினைகளையும் ஒரு தனிக் கொள்கை அடிப்படையில் தீர்க்க முடியாது. மேலும் அனைத்து தீர்வுகளையும் அக்கொள்கை கொண்டிருக்காது என்பதை அரசாங்கம் உணர்கிறது என்று சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
எனினும் சமூகத்தின் ஆற்றலையும் ஒட்டுமொத்த அறிவாற்றலையும் பயன்படுத்தினால், சிங்கப்பூர் மேலும் அதிகமான கருத்துகளையும் யோசனைகளையும் பெறலாம்; அவற்றை ஒன்றாகச் செயல்படுத்தலாம்,” என்றார் திரு டெஸ்மண்ட்.
அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் கல்வி, நிதிக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா வும் புதிய குடிமக்களை எட்டும் திட்டம் குறித்தும் பேசினர்.
நிதி வழங்குவதன் மூலம் அரசாங்கம் சமூகக் குழுக்களுடன் பணியாற்றியுள்ளது, ஆனால் அவை பொதுவாக தனித்தனியாகவே பணியாற்றின. தற்போது குழுக்களுடன் இணைந்து செயல்பட அரசாங்கம் அதன் ஒருங்கிணைப்பு சக்தியை பயன்படுத்துகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி கூறினார்.
மேலே குறிப்பிடப்பட்ட பிள்ளையைப் பொறுத்தவரையில், வீவகவும் சமூக சேவை அலுவலகங்களும் பள்ளிக்கு அருகில் பெற்றோருக்கு வீட்டு வசதியைச் செய்து தரலாம். சக மாணவர்களின் தரத்தை எட்ட மற்ற அதிகாரிகள் உதவலாம்.
வசதிகுறைந்த குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளை உயர்த்தும் நோக்கில், 2018ல் அமைக்கப்பட்ட முகவைகளுக்கிடையிலான, ‘மாணவர்களை வாழ்க்கையில் மேம்படுத்துதல் மற்றும் ஊக்கமளிக்கும் குடும்பங்கள்’ பணிக்குழுவுக்கு இந்திராணி தலைமை வகிக்கிறார்.
பிள்ளையின் தரத்தை உயர்த்த, பள்ளி, தொண்டு நிறுவனங்கள், அக்கம்பக்கத்தார் ஆகியோருடன் இணைந்து முயற்சிகளைத் தொடர முடியும் என்றார் குமாரி இந்திராணி.
சிண்டா தலைவர் என்ற முறையில் குமாரி இந்திராணி ராஜா, தாம் சந்தித்த பிரச்சினை பற்றிக் கூறினார்.
பள்ளிகளில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உதவும் பணியில் இறங்கிய அவர், உதவி தேவைப்படும் மாணவர்களை அடையாளம் காண்பதில் சிரமத்தை எதிர்நோக்கினார். இதில் அரசாங்க அமைப்புகள், அடித்தள அமைப்புகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு வளங்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம். பிரச்சினைகளை உதவி தேவைப்படுவோர் தாங்களே தீர்ப்பதற்கு பதில் இந்த முறை சிறந்தது என்றார் அவர்.
ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வது முதல் பொது இடங்களில் உறங்குவோருக்கு இடவசதி செய்து கொடுப்பது வரை பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண ‘எஸ்ஜி டுகெதர்’ இயக்கம் மக்களுடன் சரிசம பங்காளிகளாக இணைந்து செயல்பட அரசாங்கத்திற்கு உதவுகிறது என்றார் இந்திராணி.
அடித்தளத்திலுள்ள சிக்கல்களை நன்கு புரிந்துகொள்ள, திரு டெஸ்மண்ட் லீயும் அமைச்சின் அதிகாரிகளும் 2017 முதல் தங்களது வழக்கமான இரவு நடைகளின் போது சமூகக் குழுக்களுடன் இணைந்துள்ளனர். இதில் தன்னார்வலர்கள் வீடற்றவர்களுக்கு உதவி வழங்குகிறார்கள்.
குடிமக்களின் கருத்தரங்குகள் முதல் வெவ்வேறு சமூக குழுக்களை பணிக்குழுக்களில் இணைப்பது வரை ‘எஸ்ஜி டுகெதர்’ இயக்கத்தில் குடிமக்களை ஈடுபடுத்த, பல்வேறு அமைச்சுகள் வெவ்வேறு வழிகளில் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன, என்று அமைச்சர் இந்திராணி கூறினார்.
அரசாங்கத்திடமே அனைத்து யோசனைகளும் இருப்பதில்லை. மக்களிடம் இருந்தும் யோசனைகள் பெறப்பட வேண்டும். மக்களே பயனாளர்கள் என்பதால் எதிர்காலத்துக்குத் தேவையான யோசனைகளில் பங்களிக்கும் திறனை சிங்கப்பூரர்கள் பெற்றிருக்க வேண்டும் என்றார் அவர்.