தீவு விரைவுச் சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் ஒன்று, புக்கிட் பாத்தோக்கில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த டாக்சி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தீவு விரைவுச் சாலையின் சாங்கியை நோக்கிய தடத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு 11.43 மணிக்கு கார், மோட்டார்சைக்கிள் இடையிலான விபத்து நிகழ்ந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
அந்த விபத்தை மற்றொரு காரிலிருந்த கேமரா பதிவு செய்தது. விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டி சாலையின் ஓரத்தில் விழுந்து கிடப்பதைக் காணொளி காட்டியது.
விபத்தை பதிவு செய்த கேமரா இருந்த காரின் ஓட்டுநர், விபத்தில் தொடர்புடைய காரை விரட்டிச் சென்று, விபத்து குறித்து சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடம் தெரிவித்தார்.
ஆனால், விபத்தில் சம்பந்தப்பட்ட காரை ஓட்டிச் சென்ற ஆடவர் அதனை காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. அங்கிருந்த பெட்ரோல் நிலையத்திலிருந்து வெளியேறும் வழியில் அங்கு நின்றுகொண்டிருந்த டாக்சி ஒன்றின் மீதும் அவர் மோதினார்.
விபத்தில் காயமடைந்த 18 வயது மோட்டார் சைக்கிளோட்டி சுய நினைவுடன் இருந்த நிலையில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity