சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இன்று (ஜனவரி 3) மாலை முதல் சாங்கி விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது.
சீனாவின் அந்த மாநிலத்தில் சளிக்காய்ச்சல் தொற்று நோயாகப் பரவி இருப்பதே இதற்கான காரணம். அந்தப் பகுதியில் இருந்து அண்மையில் திரும்பி இருக்கும் யாருக்காவது சளிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறியும்படி மருத்துவர்களைச் சுகாதார அமைச்சு வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.
வூஹான் மாநிலத்துக்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன் சென்று வந்திருப்போரில் யாருக்காவது காய்ச்சல் அல்லது சுவாசப் பிரச்சினை அல்லது சளிக்காய்ச்சல் இருக்குமேயானால் அவர்கள் தனித்து வைக்கப்படுவார்கள் என்றும் இதன்மூலம் சளிக்காய்ச்சல் பரவுவது தடுக்கப்படும் என்றும் அமைச்சு விளக்கி உள்ளது.
சீனாவில் சளிக்காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்டு இருப்பதாகவும் அது பற்றி சீனா ஆராய்ந்து வருவதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்தச் சளிக்காய்ச்சலுக்கும் 2003ல் உலகம் முழுவதும் பரவிய சார்ஸ் எனப்படும் தொற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள், கடந்த செவ்வாய்க்கிழமை வரை 27 பேருக்குத் தொற்றுநோய் கண்டிருந்தது தெரியவந்ததாகக் குறிப்பிட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கடல் உணவுச் சந்தை ஒன்றில் கடை வைத்திருப்பவர்கள் என்று அது குறிப்பிட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity