எதிர்க்கட்சிகளான சிங்ஃபஸ்ட், சீர்திருத்தக் கட்சி, மக்கள் சக்தி கட்சி, ஜனநாயக முற்போக்குக் கட்சி ஆகிய நான்கும் சேர்ந்து வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிட இருப்பதாக அறியப்படுகிறது.
அடுத்த பொதுத் தேர்தல் வரும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும்.
இந்தக் கூட்டணி அறிவிப்பால், முன்பு 11 எதிர்க்கட்சிகளாக இருந்த எண்ணிக்கை இப்போது எட்டாகக் குறையும்.
இதன் மூலம் மும்முனை போட்டியின் சாத்தியமும் குறையும் என்று கூறப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு இப்போதுதான் ஆக அதிகமாக 11 எதிர்க்கட்சிகள் தோன்றியுள்ளன. இம்மாத இறுதிக்குள் இந்தப் புதிய கூட்டணி அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படும்.
இந்த நான்கு கூட்டணி, இதர எதிர்க்கட்சிகளான சிங்கப்பூர் மக்கள் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் குரல் கட்சி, முன்னாள் எம்.பி. டாக்டர் டான் செங் போக்கின் சிங்கப்பூர் முற்போக்குக் கட்சி ஆகியவற்றை அணுகியுள்ளதாகவும் அறியப்படுகிறது.
தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் புதிய தலைமைச் செயலாளர் ஸ்பென்சர் இங், தனது கட்சி புதிய கூட்டணியில் சேராது என்று கூறியுள்ளார். அதேபோன்ற கருத்தையும் சிங்கப்பூர் முற்போக்குக் கட்சியும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மக்கள் கட்சியின் உதவி தலைமைச் செயலாளர் அரிஃபின் ஷாவும் கூட்டணியில் சேரும் யோசனையை நிராகரிப்பதாகக் கூறினார். மக்கள் குரல் கட்சியின் தலைவர் லிம் தியேன் இந்தப் புதிய கூட்டணி பற்றி எதுவும் தெரியாது என்றார்.
புதிய கூட்டணிக்கு சிங்ஃபஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் டான் ஜீ சே தலைமை வகிப்பார் என்றும் 30 வேட்பாளர்களை அது நிறுத்தும் என்றும் அறியப்படுகிறது.