சுவா சூ காங்கில் உள்ள பலமாடி கார் நிறுத்துமிடத்தில் இன்று (ஜனவரி 4) காலை கார் ஒன்று திடீரென்று தீப்பற்றியது.
அந்த காருக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேறு இரண்டு கார்களும் கருகின.
அதிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்த இந்தத் தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சுவா சூ காங் ஸ்திரீட் 52ல் உள்ள புளோக் 541 ஏ-யின் மூன்றாவது மாடியில் தீப்பற்றியதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகின.
பாதிக்கப்பட்ட கார்களுக்கு மேலிருந்த கட்டமைப்பிலிருந்து சிமென்ட் உதிர்ந்து விழுந்திருந்தது புகைப்படத்தில் தெரிந்தது. இரண்டு பெரிய துண்டுகள் மூன்றாவது பிஎம்டபல்யூ காரின் மீது விழுந்திருந்தன.
படத்தில் காணப்பட்ட ஒரு காரின் பெரும்பகுதி தீக்கிரையாகியிருந்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு அது முற்றிலும் எரிந்துபோயிருந்தது.
இரண்டு தண்ணீர்க் குழாய்கள், இரண்டு காற்றடைக்கப்பட்ட ஃபோம் ஆகியவற்றைக் கொண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தீயை அணைத்தது. தீக்கான காரணம் குறித்து அது விசாரணை மேற்கொண்டுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity