சிங்கப்பூரின் ஆகப் புதிய பெரிய வீடமைப்புப் பேட்டையான பிடாடாரியில் உள்ள தேவைக்கேற்ப கட்டப்பட்ட வீடுகளில் (பிடிஓ) முதல் பிரிவு குடியிருப்பாளர்கள் குடியேறி இருக்கிறார்கள்.
அங்குள்ள அல்காஃப் விஸ்தா, அல்காஃப் லேக்வியூ ஆகிய இரு பிடிஓ வீட்டுத்தொகுதிகளின் 881 குடும்பங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து தங்கள் வீட்டு சாவிகளைப் பெற்று வருகின்றனர்.
சில புளோக்குகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடிகளில் கூரை தோட்டங்கள், அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்துக்கு மேல் பொதுவான பூங்காக்கள் என சுவாரஸ்யமான அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன.
அத்துடன் வெளிப்புற தளங்கள், சக்கர நாற்காலிச் செல்ல ஏதுவான சறுக்குப் பாதைகள் ஆகியவை இங்கு உண்டு.
வரும் 2022ஆம் ஆண்டில் இந்த பேட்டை முழுமையாக நிறைவு பெற்றவுடன் இங்கு நிலத்தடி பேருந்து சந்திப்பு நிலையமும் 10,000 புதிய வீடுகளுக்குச் சேவையளிக்கும் பூங்காவும் இருக்கும்.
தங்கள் வீடுகளுக்கான சாவி
களைப் பெற்றுக்கொண்டவர்களில் இருவர் 63 வயது உணவங்காடி உரிமையாளர் நியோ சுவான் ஹோய், அவரது மகன் கெவின் நியோ. அவர்கள் தங்கள் வீட்டு சாவிகளைக் கடந்த ஆண்டு நவம்பரில் பெற்றுக்கொண்டனர்.
“இது சைனாடவுனுக்கு மிக அருகில் உள்ளது. எங்கள் வீட்டுக்குக் கீழே பேரங்காடி அமையவுள்ளது. இங்கு அனைத்தும் புதிது. நான் விரைவில் புது வீட்டுக்குக் குடியேற ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று கூறினார் திருவாட்டி நியோ.
இந்தத் தாயும் மகனும் தங்கள் வீட்டின் புதுப்பிப்பு வேலையை முடித்துள்ளனர். இன்னும் இரண்டு வாரத்தில் அவர்கள் புதிய வீட்டில் குடியேறத் திட்டமிட்டுள்ளனர்.
இரு பிடிஓ புளோக்குகளில் மூன்று மாடி கார் நிறுத்துமிடங்கள் உள்ளன. அவற்றின் உச்சியில் கூரைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றியுள்ள புளோக்குகள் அனைத்தும் இந்தத் தோட்டத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோட்டம் குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடுவதற்கு உகந்த இடமாகவும் அமைந்துள்ளது.
அல்காஃப் லேக்வியூ பகுதியில் 531 வீடுகள் உள்ளன. அவை புதிதாக அமைக்கப்படவிருக்கும் புதிய அல்காஃப் ஏரியை நோக்கி இருக்கும். இந்தப் பேட்டையில் பேரங்காடி, காப்பிக் கடை, குழந்தைப் பராமரிப்பு நிலையம், கடைகள் போன்றவை கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்.
அல்காஃப் விஸ்தாவில் உள்ள நான்கு புளோக்குகளில் 350 வீடுகள் உள்ளன. அவை பிடாடாரி கிரீன்வேயுடன் இணைக்கப்பட்டிருக்கும். அங்கு சைக்கிளோட்ட மற்றும் பாதசாரிகள் பாதைகள் இருக்கும்.
இந்த 93 ஹெக்டர் நிலப்பரப்பு உள்ள பிடாடாரி பேட்டையில் வீவக புளோக்குகளுடன், மரபுடைமை நடைபாதை, திறந்தவெளி பசுமை இடங்கள், ஏரி போன்ற கண்கவர் அம்சங்கள் உள்ளன.
உட்லீ, பொத்தோங் பாசிர், பார்ட்லி ஆகிய மூன்று எம்ஆர்டி நிலையங்கள் இந்தப் பேட்டைக்கு சேவையாற்றும்.
பிடாடாரி ‘புதிய பீஷான்’ என்று பலராலும் வர்ணிக்கப்படுகிறது. பிஷான் முன்பு இடுகாடாக இருந்தது. பின்னர் அது பிரபலமான வீடமைப்புப் பேட்டையாக உருவெடுத்தது. அதுபோலத்தான் மிகப் பெரிய இடுகாடாக இருந்த பிடாடாரி பகுதி இப்போது கண்கவர் அம்சங்களையும் வசதிகளையும் கொண்ட பிரபலமான வீடமைப்புப் பேட்டையாக உருவெடுத்து இருக்கிறது.