பிலிப்பீன்சை சேர்ந்த இல்லப் பணிப்பெண்களுக்கு மத்தியில் லக்கி பிளாசா கடைத்தொகுதி பிரபலமாவதற்கு முன்பு, ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்திற்குப் பின்னால் உள்ள புல்வெளியே அவர்கள் ஒன்றுகூடும் இடமாக விளங்கியது.
“ஓய்வு நாட்களில் நண்பர்களைச் சந்திப்பதற்காக பணிப்பெண்கள் அங்கு செல்வதுண்டு. அப்போது லக்கி பிளாசாவுக்கு வெளியே அவ்வளவு கூட்ட நெரிசல் கிடையாது. எனினும், பிலிப்பீன்ஸ் நாட்டு உணவுப் பொருட்களைக் கூடுதலான கடைகள் விற்கத் தொடங்கியவுடன் அதிகமான பணிப்பெண்கள் அங்கு செல்லத் தொடங்கினர்,” என்றார் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் திருவாட்டி லியோனிலா இன்சில்லோ, 62.
1995ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 100,000ஆக இருந்த இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை, இப்போது 250,000ஆக அதிகரித்துள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில் பணிப்பெண்கள் ஒன்றுகூடுவதற்கான பொது இடங்கள் விரிவுபடுத்தப்படுவதாக தெரியவில்லை. லக்கி பிளாசாவுக்கு வெளியே திரண்டு பலரும் ஓய்வு நாட்களைக் கழிப்பது வழக்கம்.
அப்படி அவர்கள் நடைபாதையில் திரண்டிருந்தபோதுதான் கடந்த மாதம் 29ஆம் தேதி கார் ஒன்று ஆறு பணிப்பெண்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
ஒரு காலகட்டத்தில் நடைபாதைகளை அடைத்துக்கொண்டு இடையூறு விளைவித்ததாக கூறி பணிப்பெண்களைத் துரத்திவிட்ட லக்கி பிளாசா நிர்வாகம், இப்போது வியாபாரத்திற்காக அவர்களின் வருகையை நாடியுள்ளது.
இந்நிலையில், சாலையோரத்தில் உள்ள நடைபாதைகளில் திரள்வது ஆபத்தான ஒன்று என்பதை அண்மைய விபத்து பாடம் கற்பித்துள்ளதாக சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.