எம்ஆர்டியில் பயணம் செய்த 24 வயது பெண்ணின் கையில் பலவந்தமாக முத்தமிட்டு, தன்னுடன் ஓரிரவைக் கழிக்கக் கோரிய இந்திய நாட்டவருக்கு ஐந்து நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு $100 தருவதாகவும் தன்னுடன் ஹோட்டல் 81க்கு வரும்படியும் அழைத்து மன அழுத்தத்தை உண்டாக்கிய குற்றமும் தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
மீசலா சிவ பிரசாத் எனும் அந்த 34 வயது ஆடவர் சிங்கப்பூரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். முதலில் இந்தக் குற்றத்தை மறுத்த சிவ பிரசாத், அது தமது கலாசாரத்தின் அங்கம் என்று குறிப்பிட்டதை நீதிபதி நிராகரித்தார்.
மற்றொரு நீதிபதியின் முன்னிலையில் நடத்தப்பட்ட விசாரணையின்போது, நேற்று முன்தினம் (ஜனவரி 2) இந்தக் குற்றச்சாட்டுகளை சிவ பிரசாத் ஒப்புக்கொண்டார். அதே நாளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி இரவு 10.50 மணியளவில் டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் வடக்கு-கிழக்கு பாதைக்குச் செல்ல வழி கேட்டார் சிவ பிரசாத்.
தாமும் அங்கு செல்வதாகக் கூறி தம்முடன் வரும்படி கோரிய அந்தப் பெண்ணிடம், தம்முடன் ஓரிரவைக் கழிக்க ஒரு பெண்ணைத் தேடுவதாகக் கூறினார் சிவ பிரசாத்.
“எப்படிப்பட்ட பெண்ணைத் தேடுகிறாய்,” என்று கேட்ட அந்தப் பெண்ணிடமே, தம்முடன் ஓரிரவைக் கழிக்க அழைப்பு விடுத்தார் சிவ பிரசாத். அந்தப் பெண் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இருவரும் ஒரே ரயிலில் பயணித்ததாகவும் அப்போது அந்தப் பெண்ணுடனான உரையாடலைத் தொடரந்த சிவ பிரசாத், தமது பணப்பையை எடுத்து அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுக்க முயன்றார்.
அத்துடன் நிற்காமல், மறுப்புத் தெரிவித்த அந்தப் பெண்ணின் வலக்கரத்தை எடுத்து அதில் முத்தமிட்டார்.
அதனால் அந்தப் பெண் அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜோதம் டே கூறினார்.
அத்துடன் நிற்காமல் அந்தப் பெண்ணின் கைபேசி எண்ணைக் கேட்டார் சிவ பிரசாத். பயத்தில் தமது கைபேசி எண்ணைக் கொடுத்ததாக அந்தப் பெண்ணின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த எண்ணுக்கு அழைத்து அது அந்தப் பெண்ணுடையது என்பதை உறுதி செய்துகொண்ட சிவ பிரசாத், லிட்டில் இந்தியா நிலையத்தில் இறங்கிக்கொண்டார்.
பொதுவாக இந்தக் குற்றத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், சிவ பிரசாத் சில நாட்கள் விசாரணைக் காவலில் இருந்ததால், தீர்ப்பை நீதிபதியின் விருப்பத்துக்கு விடுவதாகச் சொன்னார்.
நீதிபதிக்கு சிவ பிரசாத் எழுதிய கடிதத்தில், இந்தப் பிரச்சினை காரணமாக தாம் வேலையை இழந்துவிட்டதாகவும் இரண்டு இளம் மகள்களையும் மனைவியையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது வாழ்வில் இது மிகப்பெரிய படிப்பினை என்று குறிப்பிட்டு தம் மீது கருணை காட்டும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.
சிவ பிரசாத்துக்கு ஐந்து நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக சிஎன்ஏ செய்தி குறிப்பிட்டது.
பெண்ணை மான்பங்கப்படுத்தியதற்காக சிவ பிரசாத்துக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி போன்றவை விதிக்கப்பட்டிருக்கலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity