லக்கி பிளாசா அருகில் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக $360,000க்கும் அதிகமான தொகை நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது.
இணையம் வழியாக நடத்தப்பட்ட நன்கொடைத் திரட்டு இன்று (ஜனவரி 6) நண்பகல்வாக்கில் நிறைவடைந்தது.
இல்லப் பணிப்பெண்களுக்கான நிலையமான ‘சிடிஇ’, இல்லப் பணிப்பெண்களுக்கான நலவாழ்வு நிதியுடன் இணைந்து ‘Giving.sg’ இணையப்பக்கம் வழியாக ஒரு வார காலத்தில் 2,888 நன்கொடையாளர்களிடமிருந்து $362,521 திரட்டிது.
திரட்டப்பட்ட தொகை, ‘சிடிஇ’ எதிர்பார்த்ததைவிட இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் காயமடைந்த நான்கு பணிப்பெண்களுக்கும், விபத்தில் இறந்த இரண்டு பணிப்பெண்களின் குடும்பத்தாருக்கும் இந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதன் தொடர்பில் நன்கொடை செலுத்த விரும்புவோர் லக்கி பிளாசாவில் அமைந்திருக்கும் ‘சிடிஇ’ அலுவலகத்தில் இம்மாதம் 18ஆம் தேதி வரை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு ‘சிடிஇ’ இணையப்பக்கத்தை நாடலாம்.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி பிற்பகலில் ஆறு ஃபிலிப்பினோ இல்லப் பணிப்பெண்கள் லக்கி பிளாசாவுக்குப் பின்னாலிருக்கும் நட்மெக் ரோட்டின் நடைபாதையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தபோது கறுப்பு நிற ஹோண்டா கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. கார் விழுந்த வேகத்தில் நடைபாதையிலிருந்து கீழே உள்ள சாலையில் அந்தப் பெண்கள் விழுந்ததாகக் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity