சிங்கப்பூரில் சைக்கிளோட்ட கட்டமைப்பை கிட்டத்தட்ட 1,300 கிலோ மீட்டருக்கு அதிகரிக்க அதாவது கட்டமைப்பை மும்மடங்காக்க $1 பில்லியனுக்கு மேற்பட்ட தொகை தேவைப்படும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்தக் கூடுதல் தொகை பற்றி தமது அமைச்சு நிதி அமைச்சுடன் பேசி வருவதாகக் கூறிய டாக்டர் லாம் அது குறித்து விவரிக்கவில்லை.
பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் மின்ஸ்கூட்டர்கள் நடைபாதையைப் பயன்படுத்தக்கூடாது என்று அண்மையில் தடை அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தப் புதிய திட்டங்கள் பற்றி பேச்சு எழுந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி தடை நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து, மின்ஸ்கூட்டர் தொடர்பான விபத்துகள் கிட்டத்தட்ட 30% குறைந்துள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர் லாம், அமலாக்க நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால், இந்த விகிதம் மேலும் குறையக்கூடும் என்றும் சொன்னார்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பற்றி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
சிங்கப்பூரில் உள்ள சைக்கிளோட்ட பாதை கட்டமைப்பை தற்போதைய 440 கிலோ மீட்டரிலிருந்து 1,300 கிலோ மீட்டருக்கு உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டம் பற்றி அமைச்சர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்தார்.
மேலும் இந்தத் திட்டத்தை அடுத்த சில ஆண்டுகளிலேயே நிறைவேற்ற அரசாங்கம் எண்ணியுள்ளது என்றும் கூறினார்.
“இத்திட்டத்தை அடுத்த சில ஆண்டுகளில் நடைமுறைப்படுத்த விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது குறித்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தேசிய பூங்காக் கழகம், உள்ளூர் நகர மன்றங்கள் ஆகியவற்றுடன் பேசி வருகிறோம்,” என்றும் டாக்டர் லாம் நேற்று தெரிவித்தார்.
இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்குதல் பற்றிய மேல் விவரங்கள் வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தொடங்கும் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அறிவிக்கப்படும்.
தடை அமல்படுத்தப்படுவதற்கு முன் தற்போதைய 440 கிலோ மீட்டர் சைக்கிளோட்ட பாதையுடன் 5,500 கிலோ மீட்டர் பாதசாரிகள் நடைபாதையையும் மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் பயன்படுத்தினார்கள்.
தடை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பொறுப்பற்ற மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்களுக்கு எதிராக 300 அழைப்பாணைகள் விடுக்கப்பட்டன என்று அமைச்சர் லாம், ஜூரோங் குழுத் தொகுதி உறுப்பினர் அங் வெய் நெங்கின் கேள்விக்குப் பதிலளித்தார்.
இதைத் தவிர, ஜனவரி 1ஆம் தேதி அமலாகும் புதிய விதிமுறைகள் பற்றி டிசம்பர் 31ஆம் தேதி வரை சுமார் 6,000 ஆலோசனைக் குறிப்புகள் மின்ஸ்கூட்டர் ஓட்டுநர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
இந்த ஆண்டு முதல், நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டி பிடிபடுவோருக்கு $2,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.