பொஃப்மா சட்டத்தின் ஒரு பிரிவாக உள்ள விளம்பர நடைமுறை குறியீடு, அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் பொருந்தும்.
பொய்ச்செய்தி இருப்பதாகக் குற்றம் சாட்டப்படாத விளம்பரங்களும் இதில் அடங்கும் என்றும் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் சில்வியா லிம் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
இணைய அரசியல் விளம்பரங்களின் வெளிப்படைத்தன்மை குறித்த நடைமுறை குறியீடு, சமூக ஊடகங்கள் போன்ற குறிப்பிட்ட தளங்களில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
“மேலும் குறிப்பிட்ட தளங்கள் இதர நம்பகத்தன்மை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
“உதாரணத்துக்கு, இணைய அரசியல் விளம்பரங்கள் பற்றி தரவுகளை வைத்திருக்க வேண்டும். அப்படி முறையான தகவலைத் தெரிவிக்காத விளம்பரங்கள் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க முறையான வழிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.
“தங்கள் விளம்பரங்கள் பற்றி விவரங்கள், அதனை உருவாக்கியவர், அதற்குச் செலவிட்ட தொகை, எந்த வகை மக்களை அடைய அது இலக்கு கொண்டுள்ளது, எத்தனை பார்வையாளர்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள் போன்ற தகவல்களை நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும் என்று பொஃப்மா அலுவலகம் ஏன் எதிர்பார்க்கிறது என்றும் திருவாட்டி லிம் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், “நிறுவனம் விளம்பரங்கள் தொடர்பான விவரங்களை வைத்திருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம். அதை பொஃப்மா அலுவலகம் பெற வேண்டும் என்று கூறவில்லை.
“ஒருவேளை விளம்பரம் தொடர்பான விவகாரம் தலையெடுத்தால், நிறுவனங்கள் வைத்திருக்கும் அந்தத் தகவல்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பொஃப்மா அலுவலகத்துக்கு ஏதுவாக இருக்கும்.
கூகல், டுவிட்டர் போன்ற தளங்கள் அரசியல் விளம்பரங்களை அனுமதிப்பதில்லை என்பதையும் அமைச்சர் சுட்டினார்.
விளம்பரங்கள் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதை இப்போதே தெளிவுபடுத்தவில்லை என்றால், பின்னர் தேவைப்படும் அந்தத் தகவல்கள் கிடைக்காமல் போய் விடும். பின்னர் சட்டத்தின் நோக்கமும் குலைந்துவிடும்,” என்றார் அவர்.