கட்டுமானத் துறை இந்த ஆண்டிலும் தொடர்ந்து வலுவாக இருக்கும். உலகளாவிய நிலையில் பொருளியல் நிலைத்தன்மையற்று இருந்தபோதிலும் பொதுத் துறை கட்டுமானத் தேவைகள் அதிகரிப்பால் கட்டுமானத் துறை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. புதிய ஆண்டில் மட்டும் கட்டுமானக் குத்தகையாளர்களுக்கு விடப்பட்டுள்ள பொதுத்துறைகளுக்கான கட்டட கட்டுமானத் திட்டங்களின் மதிப்பு $28 மில்லியன் முதல் $33 மில்லியன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஜூரோங் போர்ட், தஞ்சோங் பகார் முனையம் ஆகிய இடங்களில் உருவாகும் மறுசீரமைப்புப் பணிகளுக்கான திட்டங்களும் தொடரும்.
சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத் துறை மட்டும் 4 விழுக்காடு அங்கம் வகிக்கிறது.
கடந்த ஆண்டில் $33.4 பில்லியன் மதிப்புள்ள கட்டுமானத் திட்டங்கள் கட்டுமான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.5 விழுக்காடு அதிகம்.
தனியார்த்துறையில் எதிர்பாராத வகையில் கட்டுமானத்துறைக்கான தேவை அதிகரித்ததே இதற்குக் காரணம்.
லிண்டே மற்றும் எக்ஸோன்மொபிள் நிறுவனத்தின் புதிய பெட்ரோ கெமிக்கல் வசதிகளை உருவாக்கும் திட்டம் மற்றும் வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை மூலம் மறுசீரமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றால் தனியார்த் துறையில் கட்டுமானத் துறையின் தேவை அதிகரித்தது.
“உலகளாவிய நிலையில் பொருளியல் நிலைத்தன்மையற்று இருந்தபோதிலும் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையின் தேவை வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து வலுவாக இருக்கிறது என்று தேசிய வளர்ச்சி, மனிதவள அமைச்சின் துணை அமைச்சர் ஸாக்கி முகமது நேற்று கட்டடம் மற்றும் கட்டுமானத் துறை ஆணையத்தின் கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்தார்.
“2020ஆம் ஆண்டுக்கு அப்பாற்பட்டும் சிங்கப்பூரில் கட்டுமானத் துறைக்கான தேவை வலுவாக இருக்கும். சாங்கி விமான நிலைய முனையம் 5, ஜூரோங் லேக் வட்டாரம், மெரினா பே சேண்ட்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசா ஒருங்கிணைப்பு மற்றும் புதிய குறுக்கு ரயில் தடம் என எண்ணற்ற கட்டுமானத் திட்டங்கள் உள்ளதாகவும் அமைச்சர் ஸாக்கி கூறினார்.
பொங்கோலில் மின்னியல் வட்டாரமாக்கும் திட்டத்தின் மூலம் கல்விக் கழகக் கட்டடங்கள், தொழிற்கூடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்தத் திட்டங்களால் கடந்த ஆண்டு பொதுத்துறையில் கட்டுமானத் தேவை அதிகரித்துள்ளது.
2021 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆண்டு ஒன்றுக்கு $27 பில்லியன் முதல் $34 பில்லியனாக இருக்கும்.
2023-2024ல் அது $28 பில்லியனில் இருந்து $35 பில்லியனாக இருக்கும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.
கட்டுமானத் துறையின் தேவை வலுவாக உள்ளது. அதே வேளையில் சிங்கப்பூரில் இந்தத் துறை சார்ந்த திறனாளர்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது.
இருப்பினும் கட்டுமானத்துறையில் திறனாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள், மேலாண்மை அதிகாரிகள் ஆகிய பணிகளில் சிங்கப்பூரர்கள் ஈடுபடுவது கணிசமாகக் குறைந்துள்ளது.
ஏனெனில் சிங்கப்பூரர்கள் நல்ல வேலைச்சூழலையும் குறைந்த உடலுழைப்பையும் எதிர்பார்க்கின்றனர்.
அதே வேளையில் கட்டுமான நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் குறைந்த திறனுள்ள வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துகின்றன.
வலுவடைந்து வரும் கட்டுமானத் துறை சிங்கப்பூரர்களை ஈர்க்கும் வகையில் தொழில்துறை சார்ந்த சங்கங்கள், உயர் கல்விக் கழகங்கள் ஆகியவற்றுடன் அரசாங்கம் இணைந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் ஸாக்கி கூறினார்.
“கட்டுமானத் துறையின் பொறியியல் மற்றும் திட்ட நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் சிங்கப்பூர் பட்டதாரிகள் பணியாற்ற வழி வகை ஏற்படுத்த வேண்டும்.
“இந்தப் பணிகள் கட்டுமானத் துறையில் மிக முக்கியமானவை. இந்தப் பணிகளுக்கு சிங்கப்பூரர்களை ஈர்க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
“கட்டுமானத் துறையில் சிங்கப்பூர் பணியாளர்களைப் பெருக்குவதற்கு தற்போதுள்ள கொள்கைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
“இது குறித்த விவரங்கள் முடிவுசெய்யப்பட்ட பின் அறிவிப்பு வெளிவரும்,” என்று அமைச்சர் ஸாக்கி தெரிவித்தார்.