மிதிவண்டிகள், மின்மிதிவண்டிகள் தொடர்பான சாலை விபத்துகள் கடந்த ஆண்டு சிறிதளவு குறைந்தன.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 417 விபத்துகள் பதிவாகின.
அதற்கு முந்திய ஆண்டு அதே காலகட்டத்தில் பதிவான 465 விபத்துகளைவிட இது குறைவு என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டது.
ஆனால் இதன் காரணமாக மெத்தனப்போக்குடன் இருந்து
விடக்கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"மிதிவண்டி ஓட்டுபவராக இருந்தாலும் சரி, வாகன ஓட்டுநராக இருந்தாலும் சரி சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சாலைகளைப் பயன்படுத்தும் அனைவரையும் பாதுகாப்புடன் வைத்திருப்பது முக்கியம்," என்று அமைச்சர் கோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
சின் மிங் வட்டாரத்தில் உள்ள மிட்வியூ சிட்டியில் 'கிராப்ஃபூட்' நடத்திய மின்ஸ்கூட்டரைக் கொடுத்து மின்மிதிவண்டியைப் பெறுதல் நிகழ்வுக்கு அமைச்சர் கோ நேற்று வருகை அளித்திருந்தார்.
தங்களிடம் உள்ள மின்ஸ்கூட்டர்களைக் கொடுத்து அவற்றுக்குப் பதிலாக மின்மிதிவண்டிகளைப் பெறுவற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மானியத் திட்டத்துக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த நிலையம் அமைக்கப்பட்டது.
நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு விநியோக ஓட்டுநர்கள் மூவருக்கு திரு கோ மின்மிதிவண்டிகளை வழங்கினார்.
அதனை அடுத்து, பாதுகாப்புடன் ஓட்டுதல் திட்டத்தில் அமைச்சர் கோ பங்கேற்றார்.
மின்ஸ்கூட்டருக்குப் பதிலாக மற்ற சாதனங்களுக்கு மாற உதவி செய்ய இந்தத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) நடத்துகிறது. கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி 146 ஓட்டுநர்கள் திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
வேலைக்காக மின்ஸ்கூட்டருக்குப் பதிலாக மின்மிதிவண்டிக்கு மாற ஏறத்தாழ 2,600 உணவு விநியோக ஓட்டுநர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே, நிதிச் சுமையை எதிர்நோக்கும் மின்ஸ்கூட்டர் விநியோக ஓட்டுநர்களுக்காக வழங்கப்படும் நிவாரண நிதி மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக என்டியுசி கூறியது.

