போலிஸ் படையின் 200வது ஆண்டு விழா; உற்சாகமாகக் கொண்டாடிய தொண்டூழியர்கள்

போலிஸ் படையின் 200வது ஆண்டு விழா; உற்சாகமாகக் கொண்டாடிய தொண்டூழியர்கள்

2 mins read
7077e594-2fe6-4acc-b2e9-d02f35efc455
போலிஸ் படை விழாவில் அதிபர் ஹலிமா யாக்கோப். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

திரு டான் சீ வீ, வயது 42, ஆசிரியர் பணியைத் தேர்வு செய்யாமலிருந்தால் போலிஸ்காரராக மாறியிருப்பார்.

ஆனால் அப்போதும் அவர் போலிஸ் படையை மறந்துவிடவில்லை.

2002ல் தேசிய கல்விக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அவர் தன்னை சிறப்பு போலிஸ் தொண்டூழியப் படையில் இணைத்துக் கொண்டார்.

அப்போது முதல் ஹுவா சோங் பள்ளியின் ஆசிரியரான அவர் ஜூரோங் வெஸ்ட் அக்கம்பக்க காவல் நிலையத்திலும் சுவா சூ காங் அக்கம்பக்க காவல் நிலையத்திலும் சேவையாற்றி வருகிறார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1946ல் வழக்கமான பணியில் உள்ள போலிஸ் அதிகாரிகளுக்கு உதவ சிறப்பு போலிஸ் தொண்டூழியப் படை தொடங்கப்பட்டது.

சிறப்பு போலிஸ் தொண்டூழியர்களுக்கு கைது செய்யும் அதிகாரமும் உள்ளது.

திரு டான் தனது வாரயிறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் போலிஸ் அதிகாரிகளுக்கு உதவியாக இருந்து சுற்றுக் காவலிலும் ஈடுபட்டு வருகிறார்.

சில நேரங்களில் அவரது பணி 14 மணி நேரம் வரைகூட நீடிக்கிறது.

இந்த நிைலயில் சிங்கப்பூர் போலிஸ் படையின் 200வது ஆண்டு நிறைவையொட்டி நடந்த பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் திரு டானும் உற்சாகமாகப் பங்கேற்றார்.

தொடர் ஓட்டப் போட்டியிலும் அவர் கலந்துகொண்டார். வெள்ளிக் கிழமை அன்று ஓட்டப் போட்டியின் கடைசி கட்டத்தை மரினா அணைக்கட்டில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் தொடங்கி வைத்தார்.

இதில் சிங்கப்பூர் போலிஸ் படை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் உட்பட ஏறக்குறைய 3,200 பேர் கலந்துகொண்டனர்.

ஓட்டப் போட்டிக்குப் பிறகு ஓசிபிசி ஸ்கொயரில் சிங்கப்பூர் போலிஸ் படையின் 200வது ஆண்டு விழாவை அதிபர் ஹலிமா அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய திருமதி ஹலிமா, சிங்கப்பூரைப் பாதுகாக்கும் தலையாயப் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். "பயங்கரவாதம், இணையக் குற்றச்செயல்கள் போன்ற மிரட்டல்களுக்கு எதிராக சிங்கப்பூர் போலிஸ் படை நாட்டைக் காத்து வருகிறது. போலிஸ்-சமூகம் பிணைப்பையும் அவர்கள் வலுப்படுத்தி வருகின்றனர்," என்று ஹலிமா யாக்கோப் குறிப்பிட்டார்.