ஏழு ஆண்டுகளாக மனைவியின் மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த சரக்கு கிடங்கு உதவியாளருக்கு உயர் நீதிமன்றம் நேற்று 28 ஆண்டு சிறை, 24 பிரம்படிகள் விதித்தது.
விருப்பத்துக்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்த ஒவ்வொரு குற்றத்தையும் தகாத முறையில் பாலியல் உறவுகொண்ட இரு குற்றங்களையும் அந்த 41 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார்.
அச்சிறுமி ஆறு அல்லது ஏழு வயதாக இருந்தபோதிலிருந்து சிறுமியை அவர் துன்புறுத்தி வந்துள்ளார்.
தன்னைத் துன்புறுத்துவதை நிறுத்துமாறு சிறுமி கூறியபோது, அவளின் உடம்பு தன்னுடையது என்றும் எங்கு வேண்டுமானாலும் தன்னால் தொட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த ஆடவர் சிறுமிக்கு இரண்டு வயதாகும்போது அவளின் தாயாரை மணந்தார். தாயருக்கு அவர் மூலம் நான்கு பிள்ளைகள் பிறந்தன. அக்குடும்பம் ஓரறை வீட்டில் வசித்தது. 2012ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கிய அவர், 2013ல் தகாத முறையில் உடலுறவு கொள்ளத் தொடங்கினார்.
பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யத்தொடங்கியதுடன் தகாத செயல்களைச் செய்யவும் சிறுமியை வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் காக்கும்பொருட்டு எவரது பெயரும் வெளியிடப்படவில்லை.
பத்து வயதாகும்போதுதான் தனது மாற்றாந்தந்தையின் செயல்கள் தவறானவை என்று வகுப்புத் தோழி மூலம் சிறுமிக்குத் தெரியவந்தது. 12 வயது வரையில் எவரிடமும் சொல்லமுடியாமல் மௌனமாக வேதனையை அனுபவித்து வந்த சிறுமி, 12 வயதாக இருந்தபோது தன் உறவினரிடம் கூறினார்.
பள்ளியில் சிறுமி அழுது கொண்டிருந்ததைப் பார்த்த ஓர் ஆசிரியர் பள்ளி ஆலோசகரிடம் அழைத்துச் சென்றார். அன்றே போலிசில் புகார் கொடுக்கப்பட்டது.
மனநல மருத்துவரிடம் தனது மாற்றாந் தந்தையிடம் தமக்கு மிகுந்த பயம் என்றும் மிகச் சிறுவயதிலேயே தமது கன்னித்தன்மையை இழந்தது குறித்து தாம் மிகுந்த கோபமும் அவமானமும் அடைவதாகக் கூறினார்.
அந்த மனிதனின் “மோசமான நடத்தை மிகவும் வெறுக்கத்த ஒன்று,” என்று துணை அரசாங்க வழக்கறிஞர் சீ ஈ லிங் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் சிறுமியாகவும் அப்பாவியாகவும் இருந்தபோது அவர் பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார். தன்னுடைய கேவலமான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ளவும் எதிர்க்காமல் இருப்பதற்கும் பழக்கப்படுத்தினார்.
“பலமுறை நிகழ்ந்த பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர் சொல்லமுடியாத அதிர்ச்சியையும் துயரத்தையும் அனுபவித்தார்,” என்றும் அவர் கூறினார்.
இப்போது 14 வயதாகும் அச்சிறுமி, இன்னும் துன்புறுத்தலால் ஏற்பட்ட தாக்குதலின் பாதிப்பிலிருந்து மீளவில்லை என்று நீதிமன்றம் அறிந்தது.
#தமிழ்முரசு