பணியமர்த்துதலில் பாகுபாடு காட்டும் முதலாளிகள் இனி கடுமையான தண்டனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
நியாயப் பரிசீலனை சட்டமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களுக்குப் பிறகு, முதலாளிகள் ஊழியர்களைப் பணி அமர்த்துதலில் பொய்யான தகவல்களை அளித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட சட்டமைப்பின்படி, வேலையிடத்தில் பாகுபாடு காட்டும் முதலாளிகள், அவர்களுக்கு எதிரான தடை உத்தரவின்போது தங்கள் ஊழியர்களின் வேலை அனுமதிச் சீட்டை புதுப்பிக்க முடியாது.
முன்பு, பெரும்பாலும் புதிய வேலை அனுமதிச் சீட்டுக்கு மட்டும்தான் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
“மேலும், தவறிழைக்கும் இந்த முதலாளிகள் புதிய வேலை அனுமதிச் சீட்டுக்கு குறைந்தது 12 மாதங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. முன்பு இந்த காலக்கெடு ஆறு மாதங்களாக இருந்தது.
“இன்னும் மோசமான சம்பவங்களுக்கு தடைக்கான காலக்கெடு 24 மாதங்களுக்கும் நீட்டிக்கப்படலாம்,” என்றும் அமைச்சர் சொன்னார்.
“அப்படி என்றால் வேலையிட பாகுபாடு எதுவாக இருந்தாலும் முதலாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
“இதில் மிக முக்கியமானது என்னவென்றால், வேலையிடத்தில் ஊழியர்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்ற சமிக்ஞை அனைவருக்கும் சென்று சேர வேண்டும்,” என்றும் திருவாட்டி டியோ கூறினார்.
“பெரும்பாலான வேலை அனுமதிச் சீட்டுகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இந்த நிலையில், 12 மாதங்களுக்கு தடை உத்தரவு அறிவிக்கப்பட்டால் அந்த நிறுவன ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதி அல்லது பாதி அளவு வெளிநாட்டு ஊழியரணியின் வேலை அனு மதியை நீட்டிக்க முடியாது அல்லது புதுப்பிக்க முடியாது.
“இருபத்து நான்கு மாதத் தடை உத்தரவு அறிவிக்கப்படும் நிறுவனங்கள் அந்தக் காலகட்டத்தில் தங்கள் ஊழியர்கள் அனைவரது வேலை அனுமதியைப் புதுப்பிக்க முடியாது அல்லது புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடியாது.
“அப்படி என்றால் அவர்கள் நிறுவனத்தின் செயல்பாட்டைத் தொடர அதிகமான உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த நேரிடும்,” என்றும் அமைச்சர் விளக்கினார்.
இம்மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த நியாயப் பரிசீலனை சட்டமைப்பு பற்றி திருவாட்டி டியோ, நேற்று ‘சேல்ஸ்ஃபோர்ஸ் பிளாட்ஃபாம்’ நிறுவனத்தின் நிபுணத்துவ ஊழியர்கள் பங்கேற்கும் வாழ்க்கைத் தொழில் மாற்றும் திட்ட வகுப்பை முடித்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் விவரித்தார்.
குடியுரிமை, வயது, பாலினம், இனம் என பாகுபாடு தொடர்பான அனைத்து சம்பவங்களுக்கும் தண்டனைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
“பொதுவாக, பணியமர்த்துதலில் பாகுபாடு காட்டுதல் தொடர்பிலான சம்பவங்கள் குறைந்திருந்தபோதும் சில முதலாளிகள் அந்த விதிமுறைகளைப் பின்பற்ற தவறுகின்றனர்.
“அதனால்தான், இத்தகைய நடைமுறைகளைத் தடுக்க அதன் தொடர்பான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நியாயப் பரிசீலனை சட்டமைப்பை பெரும்பாலான முதலாளிகள் பின்பற்றுகிறார்கள். ஆனால், நியாயப் பரிசீலனை சட்டமைப்பை விளம்பரங்களில் மட்டும் பயன்படுத்தி, பின்னர் நிறுவனங்களில் அதனைப் பின்பற்றாத முதலாளிகளைக் களையெடுக்கவே இந்த நடவடிக்கை,” என்றார் அவர்.