பாரந்தூக்கியைக் கையாள்வது என்பது மனிதவள அமைச்சின் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளோடு பாதுகாப்பு நிறைந்த ஒன்றாக இருக்கும். மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முஹம்மது நேற்று இதனைத் தெரிவித்தார்.
பாரந்தூக்கி தொடர்பான ஆபத்தான சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து வந்தபோதிலும் அது தொடர்பாக இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டில் 21 சம்பவங்கள் பதிவான நிலையில் கடந்த ஆண்டு, அதாவது பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை 8க்குக் குறைந்துள்ளது.
“பாதுகாப்பான வேலைச் சூழலை ஏற்படுத்த தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் அதிகமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தொழிநுட்பக் கோளாறுகளினால் பாரந்தூக்கிகள் தலைகுப்புறக் கவிழ்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் நிகழ்ந்த ஆபத்தான சம்பவங்களில் பெரும்பாலானவற்றில் இது கண்டறியப்பட்டது,” என்றார் திரு ஸாக்கி.
நிலைத்தன்மை கட்டுப்பாட்டுக் கருவி போன்ற தொழில்நுட்பம் பாரந்தூக்கியை பாதுகாப்பாகக் கையாள வழிநடத்தும் என்றும் பாரந்தூக்கியை இயக்குபவர் பாதுகாப்புக்குட்பட்ட பகுதிக்கு அப்பால் அதனை விரிவடையச் செய்யும்போது இந்தக் கருவி அதனைத் தடுத்து நிறுத்தும் என்றும் அவர் விளக்கினார். இக்கருவியை தற்போதைய, புதிய பாரந்தூக்கிகளில் பொருத்த ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுக்க ஆறு அரசாங்க அமைப்புகள் முடிவு செய்துள்ளன. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஜூரோங் நகராண்மைக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம், எம்ஓஹெச் ஹோல்டிங்ஸ், தேசிய பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம் ஆகியன அவை.