பாதுகாவலருடன் வாக்குவாதம்: ரமேஷுக்கும் அவரை அச்சுறுத்திய நால்வருக்கும் போலிஸ் எச்சரிக்கை

2 mins read
472eb1c2-0a6a-48f8-9f70-e75d8276b31c
தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த அக்டோபர் மாதத்தில் தனது விருந்தினரின் காரை இரவு 11 மணிக்கு மேலாக நிறுத்துவதற்கு $10 கட்டணம் செலுத்த இயலாது என்று கூறி காவலாளி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திரு எர்ரமல்லி ரமேஷ் என்பவரை போலிசார் கடுமையாக எச்சரித்துள்ளனர். படம்: யூடியூப் காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது -

தனியார் கூட்டுரிமை வீட்டு கட்டடம் ஒன்றில் கடந்த அக்டோபர் மாதத்தில் தனது விருந்தினரின் காரை இரவு 11 மணிக்கு மேலாக நிறுத்துவதற்கு $10 கட்டணம் செலுத்த இயலாது என்று கூறி காவலாளி ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திரு எர்ரமல்லி ரமேஷ் என்பவரை போலிசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

அதேபோல, திரு ரமேஷுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மரணம், வன்முறை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றைக் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்த நால்வரையும் போலிசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்துடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக இன்று (ஜனவரி 17) போலிசார் தெரிவித்தனர்.

தமக்குத் தொந்தரவு கொடுத்தவர்களுக்கு எதிராக பிரச்சினையை எழுப்ப விரும்பவில்லை என்று திரு ரமேஷ் குறிப்பிட்டபோதும், போலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

திரு ரமேஷுக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுத்த 41, 47 வயதுகளில் இருந்த இரு ஆடவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திரு ரமேஷுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மரணம், வன்முறை போன்றவற்றைக் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்த 19, 52 வயதுகளில் இருந்த இருவருக்கு 12 மாத நிபந்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் விசாரணை முடிவடைந்த பிறகு வழக்குத் தொடர்வதற்குப் பதிலாக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நிபந்தனை எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை 12 மாதங்களுக்குள் மீறினால் அவர்கள் மீது அதிகாரிகள் வழக்குத் தொடுக்கலாம்.

வாம்போவில் இருக்கும் Eight Riversuites தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு தீபாவாளி சமயத்தில் ரமேஷுக்கும் காவலாளிக்கும் இடையில் வாக்குவாதம் நிகழ்ந்தது.

அப்போது 44 வயதான திரு ரமேஷ், தமது வீட்டை $1.5 மில்லியன் மதிப்பில் வாங்கியதைக் குறிப்பிடுவது காணொளியில் பதிவாகியிருந்தது.

திரு ரமேஷுக்கும் காவலாளிக்கும் இடையிலான வாக்குவாதத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் வெகுவாகப் பகிரப்பட்டு பலவிதமான கருத்துகளை ஈர்த்தது. திரு ரமேஷின் கல்வித்தகுதி, தனிப்பட்ட தகவல்கள், வேலை போன்றவற்றைப் பற்றியும் இணையவாசிகள் கருத்துரைத்திருந்தனர். சில கருத்துகள் அச்சுறுத்துபவையாகவும் இருந்தன.

சிங்கப்பூரில் பிறந்த சிங்கப்பூரரை மணந்ததன் அடிப்படையில் திரு ரமேஷ் சிங்கப்பூரின் குடியுரிமை பெற்றவர் என்றும் கல்வித்தகுதி பற்றி அவர் தவறான தகவல்களைத் தரவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

#ரமேஷ் #எர்ரமல்லி #கொண்டோமினியம் #காவலருடன் வாக்குவாதம் #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்
இந்தியர்காவலர்