அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்ற நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரத்தில் சில்வியா லிம்முக்கும் லோ தியா கியாங்குக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற தேசிய வளர்ச்சி அமைச்சின் திருத்த உத்தரவை ஏற்றுக்கொள்வதாக நேற்று அந்த நகர மன்றத்தின் நிர்வாகம் அறிவித்தது. இதற்கு இரண்டு காரணங்களையும் அது தெரிவித்தது.
உத்தரவை புறக்கணித்தால் நகர மன்றத்தின் செயலாளர் அல்லது தலைவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதை தவிர்க்க வேண்டியுள்ளது. இரண்டாவது காரணம், குடியிருப்புப் பேட்டையை நடத்தும் தலையாயப் பணியில் கவனம் செலுத்து விரும்புவதாக அது கூறியுள்ளது.
தேசிய வளர்ச்சி அமைச்சுக்கு எழுதிய கடிதத்தில் “எங்களுடைய குடியிருப்பாளர்களுக்காக அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தில் உள்ள வீவக பேட்டைகளை நிர்வகித்து பராமரிக்கும் முக்கிய பணிகளில் எங்களுடைய கவனத்தை செலுத்த விரும்புகிறோம்,” என்று அந்த மன்றத்தின் தலைவரான ஃபைசால் மனாப் தெரிவித்தார். இதன் காரணமாக திருத்த உத்தரவை ஏற்றுக்கொள்வதாகநகரமன்றம் தெரிவித்தது.
இம்மாதத்தின் தொடக்கத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், நகர மன்றத்தின் நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் சில்வியா லிம்முக்கும் லோ தியா கியாங்குக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டிருந்தார்.
அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தில் மீண்டும் நிதி முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அமைச்சு கூறியிருந்தது.
அல்ஜுனிட் குழுத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால் சில்வியா லிம்மும் லோவும் நகர மன்ற உறுப்பினர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டப்பிரிவு ‘43D(2)(b)’ கீழ் பிறப்பிக்கப்பட்ட திருத்த உத்தரவை மதித்து நடப்பது கட்டாயமாகும். இதன்படி நகர மன்றத்தின் செலவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தன்னிச்சையாக முடிவு எடுக்க அதிகாரமில்லை.