இதுநாள் வரை காட்சியளித்து வரும் சாங்கி விமான நிலையம் இரண்டாவது முனையத்தின் விமானப் பயணம் தொடர்பான தகவல் திரை அப்புறப்படுத்தப்பட உள்ளது. பலரது நினைவில் பதிந்த அத்திரையின் ஆகக் கடைசி இரண்டு எஞ்சியுள்ளன. பிப்ரவரி மாதம் முதல் மின்னிலக்கத் திரைக்கு வழிவிடும் பொருட்டு இத்திரைகள் விடைபெறுகின்றன.
இத்தாலிய நிறுவனம் தயாரித்து இரண்டாம் முனையத்தில் பொருத்தி இருந்த அந்தத் திரைகளை நிர்வகிப்பது அதிக சவாலாக மாறிவிட்டதாக சாங்கி விமான நிலையக் குழுமப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறினர்.
மேலும் திரையில் பயன்படுத்தப்படும் எண், எழுத்து போன்றவை பழுதாகிவிட்டால் அவற்றை நீக்கி புதியவற்றைத் தேடி கண்டு பிடிப்பது கடினமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
விடைபெற இருக்கும் இரு தகவல் திரைகளும் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் 1999ஆம் ஆண்டு முதல் காட்சியளித்து வந்தன.
சாங்கி விமான நிலையத்தின் அத்தனை முனையங்களிலும் இந்த இரண்டு மட்டும்தான் எஞ்சி உள்ளன. பயணப் பதிவு வரிசைகள் 9 மற்றும் 10ல் அத்திரைகள் அமைந்துள்ளன. முப்பதாண்டு பழமையான இரண்டாம் முனையத்தில் பெரிய அளவில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதைத் தொடர்ந்து மின்னிலக்கத் திரை அறிமுகம் காணும். இதர மூன்று முனையங்களும் ஏற்கெனவே மின்னிலக்கத் திரைக்கு மாறிவிட்டன.