சிங்கப்பூரின் தென்மேற்கு வட்டாரத்தில் நேற்று மிகப் பெரிய மறுபயனீடு நிகழ்ச்சி நடைபெற்றது. சீனப் புத்தாண்டுக்கு முன்பு வீடுகளைச் சுத்தம் செய்து வருபவர்களிடம்இருந்து மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களைப் பெற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தென்மேற்கு வட்டாரக் குடியிருப்பாளர்கள் காலை 8.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களை சுவா சூ காங் சமூக மன்றத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களைக் கொடுத்து அவற்றுக்குப் பதிலாக மளிகைப் பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.
சமூக மன்றத்திடம் மின்கழிவு
களைக் ஒப்படைத்தவர்களுக்கு அதற்குப் பதிலாக தொழில்நுட்ப வர்த்தக நிறுவனமான சேலஞ்சரின் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. துணிகள், பழைய தாட்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக அரிசி, நூடல்ஸ் போன்றவை வழங்கப்பட்டன.
‘கிளீன் அப் சவுத் வெஸ்ட்’ என்று அழைக்கப்படும் இந்த வருடாந்திர திட்டம் 15வது முறையாக நேற்று நடத்தப்பட்டது.
மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களைச் பெற்றுக்கொள்ளும் இடங்கள் 47லிருந்து 54க்கு உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றில் பள்ளிகள், சமூக மன்றங்கள் போன்ற இடங்களும் அடங்கும். மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களை பொதுமக்கள் கொண்டு வந்து கொடுப்பதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சுவா சூ காங் சமூக மன்றத்தில் மட்டும் மொத்தம் 4,636 கிலோ கிராம் மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மறுபயனீட்டு நடவடிக்கைகள், குப்பைகளற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் தென்மேற்கு வட்டாரம் பத்து சாலைக்காட்சிகளை நடத்த இருக்கிறது. அவற்றின் முதல் சாலைக் கண்காட்சி நேற்று நடைபெற்றது.
ஏஞ்சியிருக்கும் ஒன்பது சாலைக் கண்காட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறும். தென்மேற்கு வட்டாரத்தில் வசிக்கும், வேலை செய்யும் ஏறத்தாழ 20,000 பேர் பங்கெடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வட்டாரத்தின்கீழ் சுவா சூ காங், ஜூரோங், புக்கிட் பாத்தோக், வெஸ்ட் கோஸ்ட் போன்ற பெரிய குடியிருப்பு வட்டாரங்கள் இடம்பெறுகின்றன.
நிலைத்திருக்கும் தென்மேற்கு எனும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி யாக இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தென்மேற்கு வட்டாரத்தின் சுற்றுசூழல் திட்டங்களை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வழிநடத்த இந்தப் பெருந்திட்டம் இலக்கு கொண்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
“கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு வட்டாரத்திலிருந்து 885 டன் எடை கொண்ட மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களைப் பெற்றுள்ளோம். இது ஒன்பது ஒலிம்பிக் போட்டி நீச்சல் குளங்களுக்குச் சமம். இதன் விளைவாக 15,000க்கும் மேற்பட்ட மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன,” என்று தென்மேற்கு வட்டாரத்தின் மேயர் திருவாட்டி லோ யென் லிங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் மட்டும் தென்மேற்கு வட்டாரத்தில் உள்ள 15 இடங்களில் 3,500 கிலோ கிராம் மின்கழிவுகள் பெறப்பட்டதாக அவர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்தன்மையை தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் ஊக்குவித்து வருவதாகவும் கூறினார்.